பாகிஸ்தான் ஏவுகணைகள், ட்ரோன்களை இடைமறித்து அழித்த இந்திய ராணுவம் - உயிரிழப்பு இல்லை என ஐடிஎஸ் தகவல்!
ஜம்மு மீது பாகிஸ்தான் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலை இந்திய ராணுவம் நடுவானில் அழித்தது!

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவம், ஜம்மு நகரில் ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருவதை ஈடிவி பாரத் செய்தியாளர் நேரடியாக கண்டு செய்தியை பகிர்ந்துள்ளார்.
ஜம்மு&காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் குளிர்கால தலைநகரான ஜம்மு மீது பாகிஸ்தான் ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருவதாக காஷ்மீர் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தானில் பாகிஸ்தான் விமானி பிடிபட்டார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் பகுதியில் பாகிஸ்தான் விமானப்படையின் விமானி ஒருவர் இந்திய ராணுவத்தினரிடம் பிடிபட்டுள்ளார். இது குறித்து ராஜஸ்தான் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்த தகவல்கள் மேலும் எதிர்பார்க்கப்படுகின்றன.
இந்தியா முழுமையான தயார் நிலை
இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நிலையான வழிகாட்டும் நெறிமுறைகள் மூலம், அனைத்து அச்சுறுத்தல்களும் விரைவாக அழிக்கப்பட்டுள்ளன. உயிரிழப்புகளோ அல்லது பொருட்சேதமோ இல்லை,"என கூறப்பட்டுள்ளது.
ஜம்மு நகரின் மீது பாகிஸ்தான் தொடர் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ஜம்மு நகரில் உள்ள மக்கள் வானத்தில் இருந்து ட்ரோன்கள், ஏவுகணைகள் கீழே விழுவதை கண்டதாக ஈடிவி பாரத்திடம் கூறியுள்ளனர். அதே நேரத்தில் பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகளை இந்தியாவின் வான் தடுப்பு முறை வெற்றிகரமாக இடைமறித்து வானிலையே அழித்து வருகிறது.
இது குறித்து ஈடிவி பாரத் இணையத்தளத்துடன் பேசியோர், தாமவே தேடுதல் நடத்தி இலக்குகளை தாக்கக் கூடிய ட்ரோன்களை ஜம்மு மீது குறிவைத்து பாகிஸ்தான் ஏவி உள்ளது. ஆனால், அதனை நமது நாட்டின் வான்வெளி தடுப்பு முறை அதனை இடைமறித்து பெரும்பாலானவற்றை அழித்து விட்டது,"என்று கூறினர். ஈடிவி பாரத்தின் செய்தியாளர் முகமது அஷ்ரஃப் உள்ளிட்ட பலரும் ஜம்மு நகரின் வான்வெளியில் ட்ரோன்கள் பறந்து வருவதைக் கண்டுள்ளனர்.
ஜம்மு மக்கள் ட்ரோன் தாக்குதலை வீடியோவாகவும், புகைப்படமாக பதிவு செய்துள்ளனர். பல்வேறு பகுதிகள் இலக்காக வைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்படுகின்றன. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவல்களும் வெளியாக வில்லை. ஜம்முவில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. நகரில் பல்வேறு பணிகளுக்காக வந்த பொதுமக்கள், ட்ரோன் தாக்குதல் பீதி காரணமாக வீடுகளுக்கு விரைந்துள்ளனர்.
மக்களின் எக்ஸ் பதிவு: இது குறித்து ஜம்முவை சேர்ந்த தீபிகா புஷ்கர் நாத் என்பவர் தம்முடைய எக்ஸ் தளத்தில் எழுதியுள்ள கருத்தில், "ஏவுகணைகள் எங்களது இப்போது வீட்டின் மீது பறக்கின்றன. பிறர் என்னிடம் கூறிய தகவல்களை நான் இங்கு பதிவு செய்யவில்லை. நானே பார்த்த காட்சிகளை பதிவு செய்து, நானே இதனை பதிவு செய்துள்ளேன். இந்த அச்சுறுத்தல் உண்மையானது. மக்களின் உயிருக்கு தீங்கு ஏற்படும் அபாயம் உள்ளது,"எனக் கூறியுள்ளார். மேலும் ஜம்மு நகருக்கு மேலே வானில் ட்ரோன்கள் பறந்து வருவதையும் வீடியோவாக பதிவு செய்து தமது எக்ஸ் பதிவில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும் ஜம்மு முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதால் நகர் முழுவதும் இருள் சூழ்ந்துள்ளது.
ட்ரோன்கள் அழிக்கப்பட்டன: ஒருங்கிணைந்த பாதுகாப்பு தலைமை(IDS) வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜம்மு, பதான்கோட், உதாம்பூர் ஆகிய ராணுவ நிலைகள் சர்வதேச எல்லைக்கு அருகே உள்ளன. ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஜம்மு&காஷ்மீரை பாகிஸ்தான் குறிவைத்து தா்க்குதல் நடத்தி வருகிறது. எனினும் எந்த உயிரிழப்புகளும் இல்லை. நிலையான வழிகாட்டும் நடைமுறைகள் மூலம் இந்திய ராணுவ படைகளால் அச்சுறுதல் இடையீடு செய்யப்பட்டது.