பேரறிஞர் அண்ணா நினைவு நாள்.. மலர்வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
,
பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு நாளை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, கருணாநிதி நினைவிடத்திலும் மலர்வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இது குறித்து அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில், "அண்ணா வழியில் அயராது உழைப்போம்! தந்தை பெரியார் குறித்து பேரறிஞர் அண்ணா கூறியது, “எது நேரிடினும் மனத்திற்பட்டதை எடுத்துச் சொல்வேன் என்ற உரிமைப் போர் பெரியாருடைய வாழ்வு முழுவதும். அதிலே அவர் கண்ட வெற்றி மிகப் பெரியது. அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவில்லை. இன்று அனைவரும் பெற்றுள்ளனர்.”
தந்தை பெரியாரின் புகழொளியையும் - அறிவொளியையும் தந்து நம்மை ஆளாக்கிய தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ் வணக்கம். நம்முடைய நோக்கம் பெரிது! அதற்கான பயணமும் பெரிது! வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள். நாம் மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று லட்சியப் பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம்" எனப் பதிவிட்டுள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, மேயர் பிரியா உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் பலரும் இந்த அமைதிப் பேரணியில் கலந்து கொண்டு, பேரணியாகச் சென்று மரியாதை செலுத்தினர்.