மியூனிக் விமான நிலையத்தில் மர்ம ட்ரோன்கள்: ஸ்தம்பித்தது விமானப் போக்குவரத்து!
சமீப காலமாகவே, போலந்து, எஸ்டோனியா, டென்மார்க் போன்ற பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் ராணுவ தளங்கள்மீது மர்ம ட்ரோன்கள் பறப்பது தொடர்கதையாகி வருகிறது.
மியூனிக், ஜெர்மனி: ஜெர்மனியின் , மியூனிக் விமான நிலையத்தின் வான்பரப்பில் அடையாளம் தெரியாத மர்ம ட்ரோன்கள் வட்டமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி, விமான நிலையத்தின் அனைத்து விமானப் போக்குவரத்தும் நேற்று வியாழக்கிழமை இரவு முழுவதும் நிறுத்தப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் விடிய விடிய விமான நிலையத்தில் தவிக்கும் சூழல் உருவானது.
நேற்று இரவு சுமார் 9:30 மணியளவில், விமான நிலையத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில ட்ரோன்கள் பறப்பதை பலர் கண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, இரவு 10:30 மணியளவில், ட்ரோன்கள் விமான நிலையத்தின் மேலே நேரடியாகப் பறக்கத் தொடங்கியதால், அதிகாரிகள் உடனடியாக அவசர நிலை பிரகடனம் செய்தனர். விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகளும் உடனடியாக மூடப்பட்டு, அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
இந்த திடீர் நடவடிக்கையால், மியூனிக்கிலிருந்து புறப்படத் தயாராக இருந்த 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் சுமார் 3,000 பயணிகள் தங்கள் பயணத்தைத் தொடர முடியாமல் விமான நிலையத்திலேயே சிக்கிக்கொண்டனர். மேலும், மியூனிக்கிற்கு வரவிருந்த 15 விமானங்கள், ஸ்டுட்கார்ட், நியூரம்பர்க், வியன்னா போன்ற பிற நகரங்களுக்குத் திருப்பி விடப்பட்டன. பலர் இருக்கைகளிலும், தரையிலும் இரவுப் பொழுதைக் கழிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
தகவலறிந்த பவேரிய காவல்துறை, ஹெலிகாப்டர்கள் உதவியுடன் அந்த மர்ம ட்ரோன்களையும், அதை இயக்கியவர்களையும் கண்டுபிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. ஆனால், விடிய விடிய நடந்த இந்தத் தேடுதல் வேட்டையில் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. "அந்த ட்ரோன்களின் வகை, எண்ணிக்கை அல்லது அதன் உரிமையாளர்கள் பற்றிய எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை" என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் கவலையுடன் தெரிவித்துள்ளார். சுமார் 7 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, இன்று காலை 5:50 மணியளவில்தான் விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
சமீப காலமாகவே, போலந்து, எஸ்டோனியா, டென்மார்க் போன்ற பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் ராணுவ தளங்கள்மீது மர்ம ட்ரோன்கள் பறப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்த ஊடுருவல்களின் பின்னணியில் ரஷ்யா இருக்கலாம் என்று பல நாடுகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், தற்போது ஜெர்மனியிலும் அதே போன்ற சம்பவம் நடந்திருப்பது ஐரோப்பிய பாதுகாப்பு வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.


