நாட்டிலுள்ள 1,557 ஆரம்ப பாடசாலைகளை மூடுவதற்கு அரசு தீர்மானம்- குற்றம் சுமத்தும் ஆசிரியர் சங்க தலைவர்!
இந்த நாட்டின் இலவசக் கல்விக்கு விழும் ஒரு அடி.

நாட்டிலுள்ள 1,557 ஆரம்ப பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனால் மூன்று சதவீதமாக உள்ள, தொடக்கக் கல்வியை விட்டு வெளியேறும் குழந்தைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ குற்றம் சுமத்தியுள்ளார்.
அநுராதபுரத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட 1,557 ஆரம்ப பாடசாலைகளை மூடுவதற்கு, அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் இந்த நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடு ஒரு பாடசாலையை மட்டுமே அடையக்கூடிய தொலைதூர மற்றும் கடினமான பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு இழைக்கப்டுகின்ற அநீதியாகும்.
இந்த நடவடிக்கையின் காரணமாக கிராமப்புறங்களில் உள்ள சுமார் பத்தாயிரம் பாடசாலை மாணவர்களை உதவியற்றவர்களாக மாற்றும்.
முந்தைய அரசாங்கங்கள் இந்த சீர்திருத்தங்களைக் கொண்டுவரத் தயாராகி வந்த நிலையில், அந்த நேரத்தில் போர்க்களத்தில் இருந்த தற்போதைய அரசாங்கம் இதைச் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது என்று அவர் கூறினார்.
நாட்டில் தற்போது நிலவும் சுமார் 40000 ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக, ‘காயமடைந்த காலில் கட்டு போடுவது’ போன்ற ஒரு தீர்வைப் பயன்படுத்துவது, இந்த நாட்டின் இலவசக் கல்விக்கு விழும் ஒரு அடியாகும்
பாடசாலை மறுசீரமைப்பு திட்டத்தின் மூலம், கீழ்நிலை உயர்தரப் பிரிவுகளை மூடிவிட்டு, அவற்றை மற்ற பாடசாலைகளுடன் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் தற்போது தயாராகின்றது.
இது சாதாரண தரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் உயர்தர பரீட்சை எழுதும் அபாயத்தையும் உருவாக்குகிறது.
இதற்கு செய்ய வேண்டியது, சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கு அந்தப் பாடத்திற்கு ஏற்ற ஆசிரியர்களை வழங்குவதும், வசதிகளை வழங்குவதுமே தவிர, அந்தப் பிரிவுகளை மூடுவது அல்ல என்று அவர் சுட்டிக்காட்டினார்.