"பல்கலை. வேந்தர் முதல்வரே" என தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்! தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக எடுத்துக் கொள்ளப்படும்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களை அவர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாகவும் தமிழ்நாட்டின் மூன்று பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களின் நியமன விவகாரத்தில் ஆளுநரின் தலையீடு அதிகரிப்பதாகவும் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்றது. மேலும், அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.
இந்த நிலையில், ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று பரபரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதில், தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக எடுத்துக்கொள்ளப்படும் என தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதாவது, தமிழ்நாடு அரசு அனுப்பிய 10 மசோதாக்கள் மீது ஆளுநர் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகின்றன. இந்த மசோதாக்கள் ஆளுநரிடம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து அங்கீகரிக்கப்பட்டதாகக் கருத்தில் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மாநில அரசின் ஆலோசனைப் படியே ஆளுநர் செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு மீண்டும் அனுப்பப்பட்ட மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்டவிரோதமானது. மசோதா மாற்றப்பட்டிருந்தால் மட்டுமே குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது. ஆளுநருக்கென பொதுவாக தனி விருப்புரிமை இருக்க முடியாது. மேலும், 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த தமிழ்நாடு ஆளுநரின் முடிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்கிறது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
மேலும், “மசோதா விவகாரத்தில் ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. பஞ்சாப் ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆளுநரிடம் செல்லும் மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றே பல்வேறு தீர்ப்புகள் கூறுகின்றன.
ஆளுநருக்கு ‘வீட்டோ’ அதிகாரம் இல்லை. அரசியலமைப்பு சாசனம் 200-வது பிரிவின் படி ஆளுநர் செயல்பட வேண்டும். மசோதாக்கள் அனுப்பி வைக்கப்படும் போது ஆளுநருக்கு முன் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தலாம்.
மேலும், மசோதாவிற்கு உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்கும் முடிவை ஆளுநர் எடுக்க வேண்டும். அதன்படியே அவற்றிற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆளுநர்கள் ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும். திருப்பி அனுப்பும் முடிவையும் 2 மாதங்களுக்குள் எடுக்க வேண்டும்,” என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி மாநில அரசுகள் அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடுவை நிர்ணயித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.