மகளிர் தின நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை!
பிங்க் ஆட்டோ தொடக்க விழாவில் ஸ்டாலின் உருக்கம்.

பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை என்பதால் மகளிர் தின நிகழ்ச்சியில் தான் பங்கேற்றதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர் சென்னையில் பெண்களுக்கு மானிய விலையில் 250 பிங்க் ஆட்டோ திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
சமூகநலத் துறை மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை சார்பில் கடந்த ஆண்டு சட்டசபை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்ட மகளிர் பிங்க் ஆட்டோ திட்டத்தை இன்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் உலக மகளிர் தின விழா நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை என்பதால் மகளிர் தின நிகழ்ச்சியில் பங்கேற்றேன். மகளிர் தினம் கொண்டாடப்படும் மார்ச் மாதத்தில் பிறந்ததில் (மார்ச் 1) எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. பெண்ணை அடிமையாக நினைக்கும் எண்ணம் ஒழிய வேண்டும் என்றார் பெரியார். எல்லா துறைகளிலும் பல தடைகளைத் தாண்டி சாதனை படைக்கும் பெண்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஆணாதிக்க மனப்பான்மை மறந்து பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்க வேண்டும். பெண்களை கேலி செய்வதோ கொச்சைப்படுத்துவதோ கூடாது. பெண்களின் பாதுகாப்புக்காக ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய பிங்க் ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், ஈரோடு, ராணிப்பேட்டை உள்ளிட்ட ஊர்களில் புதிய தோழி விடுதிகள் ரூ 72 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார் முதல்வர்.
250 பெண்கள்: இந்த திட்டத்தில் முதல் கட்டமாக 250 பெண் ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்பட்டு சென்னையில் பிங்க் ஆட்டோ சேவையை வழங்கவுள்ளார்கள். இவர்களுக்கு ஆட்டோ வாங்குவதற்காக ஒரு லட்சம் ரூபாய் வரை அரசு மானியம் வழங்குகிறது. இதையடுத்து தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள மகளிர் பயன்பெறும் வகையில் ரூ 3000 கோடியில் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்படவுள்ளன.
மகளிர் சுய உதவிக் குழு: அது போல் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகளையும் முதல்வர் வழங்குகிறார். மேலும் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் தோழி மகளிர் விடுதி திட்டம் மேலும் விரிவடைய இன்று அறிவிப்புகள் வெளியாகலாம்.
யாரெல்லாம் பிங்க் ஆட்டோவுக்கு விண்ணப்பிக்கலாம்: ஓட்டுநர் உரிமம் உள்ள 25 வயது முதல் 45 வயது வரையிலான பெண்கள் பிங்க் ஆட்டோ திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப காலம் வருகிற டிசம்பர் 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிங்க் ஆட்டோ பெற தகுதிகள்: சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மானிய விலையில் ஆட்டோக்கள் வழங்கப்படுகின்றன. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.
பெண்களுக்கு மட்டுமே: இந்த ஆட்டோக்கள் பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படும். முற்றிலும் பெண்களாலேயே இயக்கப்படும். இதனால் ஆட்டோக்களில் பெண் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. மேலும் இந்த ஆட்டோக்களில் பாதுகாப்புக்காக மகளிர் காவல் நிலையங்களுடன் தொடர்பு கொள்ளும் வகையில் ஜிபிஎஸ் கருவி, பெண்களுக்கான உதவி எண்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. 250 பெண்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் அரசு மானியம் வழங்கப்படுகிறது. இந்த ஆட்டோ திட்டத்திற்காக மொத்தமாக ரூ 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரூ 1 லட்சம் மானியம் : இந்த ஆட்டோக்களை பெற தகுதியானவர்கள்- பெண்கள் மட்டும்தான், கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். சென்னையில் குடியிருக்க வேண்டும். CNG/Hybrid ஆட்டோ வாங்க தமிழக அரசு ரூ 1 லட்சத்தை மானியமாக வழங்கும். ஆட்டோ வாங்குவதற்கு தேவையான மீதி பணத்தை வங்கிகளில் கடனாக பெறவும் ஏற்பாடுகள் செய்து தரப்படும். இந்த ஆட்டோக்களை மானிய விலையில் பெற குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.