சுவீடனில் சட்டவிரோதக் குடியேறிகளை தடுக்க புதிய சட்டம்: 'இணையான சமூகத்தை' ஒழிக்க அரசின் அதிரடித் திட்டம்!
இந்தச் சட்டத்திற்கு 'காட்டிக்கொடுக்கும் சட்டம்' எனப் பெயரிட்டு மனித உரிமை அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
சுவீடனில் சட்டவிரோதக் குடியேறிகளை தடுக்க புதிய சட்டம்: 'இணையான சமூகத்தை' ஒழிக்க அரசின் அதிரடித் திட்டம்!
சுவீடன் நாட்டில் முறையான ஆவணங்கள் இன்றித் தங்கியிருக்கும் குடியேறிகளைக் காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும் என்று அரசுத் துறைகளைக் கட்டாயப்படுத்தும் புதிய சட்டத்தை அந்நாட்டு அரசு தீவிரமாக முன்னெடுத்துள்ளது. 'இணையான சமூகம்' (சட்டத்திற்குப் புறம்பாக வாழ்பவர்களின் கட்டமைப்பு) உருவாவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்வீடன் அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2022 ம் ஆண்டு பதவியேற்ற வலதுசாரி அரசு, குடியேற்ற விதிகளைக் கடுமையாக்கும் வாக்குறுதியை அளித்திருந்தது. அதன்படி, வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இந்தச் சட்டத்தை அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. சுவீடனில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் முறையான வதிவிட அனுமதியின்றி வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின்படி, வேலைவாய்ப்பு அலுவலகம், சமூகக் காப்பீட்டுத் துறை, சிறைத்துறை, கடன் மீட்பு முகமை, ஓய்வூதிய ஆணையம் மற்றும் வரித்துறை ஆகிய ஆறு முக்கிய அரசுத் துறைகள், தங்களிடம் வரும் நபர்கள் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பதாகச் சந்தேகித்தால் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இந்தச் சட்டத்திற்கு 'காட்டிக்கொடுக்கும் சட்டம்' எனப் பெயரிட்டு மனித உரிமை அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதன் விளைவாக, மருத்துவம், பள்ளிகள், சமூக சேவைகள் மற்றும் நூலகங்கள் ஆகிய மனிதநேயம் சார்ந்த துறைகளுக்கு மட்டும் இந்த விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு கடத்தும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த, கைரேகை போன்ற உயிரியல் அடையாளத் தரவுகளைச் சேகரிக்கும் முறையையும் அரசு தீவிரப்படுத்த உள்ளது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் நாடாளுமன்றத்தில் நிறைவேறினால், வரும் ஜூலை பதிமூன்றாம்திகதி முதல் நடைமுறைக்கு வரும்.
அதேசமயம், அரசின் இந்த நடவடிக்கை நேர்மாறான விளைவுகளையே ஏற்படுத்தும் எனத் தொழிற்சங்கங்களும் தொண்டு நிறுவனங்களும் எச்சரிக்கின்றன. காட்டிக்கொடுக்கப்படுவோம் என்ற அச்சத்தில், முறையான ஆவணங்கள் இல்லாதவர்கள் அரசு அதிகாரிகளை அணுகுவதையே முற்றிலுமாகத் தவிர்ப்பார்கள். இதனால் கல்வி, சமூகப் பாதுகாப்பு போன்ற அடிப்படை உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்படுவதோடு, அவர்கள் முற்றிலுமாகச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, நிழல் உலகமாக மாற அதிக வாய்ப்புள்ளது என மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தச் சட்டம் முழுமையாக அமலுக்கு வருவதற்கு முன்பே, ஆவணமற்ற குடியேறிகள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
- சிவா சின்னப்பொடி


