அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் கூறிய தெளிவான செற்தி! - "ஈரான் ஒருபோதும் போரைத் தொடங்கியதில்லை!"
ஈரானின் நவீன வரலாற்றில், அது எந்தவொரு நாட்டிற்கும் எதிராக ஆக்கிரமிப்புப் பாதையைத் தேர்ந்தெடுத்ததில்லை
அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் கூறிய தெளிவான செற்தி! - "ஈரான் ஒருபோதும் போரைத் தொடங்கியதில்லை!"
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் போர் குறித்து நாட்டு மக்களிடம் முக்கிய உரையாற்றவுள்ள நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் (Massoud Pezeshkian) அமெரிக்க மக்களுக்கெனப் பகிரங்கக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று (ஏப்ரல் 1, புதன்கிழமை இரவு) வெளியான அந்தக் கடிதத்தில், மோதலைத் தவிர்த்துப் பேச்சுவார்த்தையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் அமெரிக்கர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தக் கடிதத்தின் முக்கிய அம்சங்கள்:
"நாங்கள் போரைத் தொடங்கியதில்லை": ஈரானின் நவீன வரலாற்றில், அது எந்தவொரு நாட்டிற்கும் எதிராக ஆக்கிரமிப்புப் பாதையைத் தேர்ந்தெடுத்ததில்லை என்றும், தாமாக முன்வந்து எந்தப் போரையும் தொடங்கியதில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார். தம்மீது திணிக்கப்படும் "திரிக்கப்பட்ட பொய்க் கதைகள் மற்றும் கற்பனை பிம்பங்களை"த் தாண்டி உண்மையைப் புரிந்துகொள்ளுமாறு அமெரிக்க மக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், அமெரிக்கர்கள் உட்பட எந்தவொரு தேசத்தின் மீதும் ஈரானியர்களுக்கு எவ்விதப் பகைமையும் இல்லை என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
அமெரிக்கக் கொள்கைகள் மீது குற்றச்சாட்டு: கடந்த 1953-ஆம் ஆண்டு ஈரானில் அமெரிக்கா நடத்திய ஆட்சி மாற்றச் சதி (Coup d'État) முதற்கொண்டே இரு நாடுகளுக்கும் இடையே அவநம்பிக்கை வேரூன்றிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய கிழக்கில் தனது ராணுவ இருப்பையும் அழுத்தங்களையும் நியாயப்படுத்துவதற்காக, அமெரிக்கா திட்டமிட்டு "ஒரு எதிரியை உருவாக்குகிறது" என்றும், "அச்சுறுத்தல் இல்லாவிட்டாலும், அதனை அவர்கள் செயற்கையாக உருவாக்குகிறார்கள்" என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
தற்காப்புக்கான ஆயுதங்கள்: தங்கள் பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகள் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளதைக் சுட்டிக்காட்டிய ஈரான் அதிபர், ஈரானின் தற்போதைய ராணுவ விரிவாக்கம் என்பது அச்சுறுத்தலுக்காக அல்ல; அது "முற்றிலும் தற்காப்பை அடிப்படையாகக் கொண்ட ஒரு அளவிடப்பட்ட நடவடிக்கை" மட்டுமே எனத் தற்காத்துக்கொண்டுள்ளார்.
அமெரிக்கர்களிடம் எழுப்பிய முக்கியக் கேள்வி: தொடர் ராணுவ மோதல்கள் மற்றும் பொருளாதாரத் தடைகளால் அப்பாவி மக்கள் சந்திக்கும் மனிதாபிமானமற்ற அழிவுகள் குறித்து அவர் எச்சரித்துள்ளார். "இந்தப் போரின் மூலம் அமெரிக்க மக்களின் என்ன வகையான நலன்கள் உண்மையில் நிறைவேற்றப்படுகின்றன?" என்று அமெரிக்கப் பொதுமக்களைப் பார்த்து அவர் ஆழமான கேள்வியொன்றை எழுப்பியுள்ளார்.
எதிர்காலத்திற்கான அழைப்பு: இறுதியாக, "அழிவைத் தரும் மோதலா அல்லது ஆக்கபூர்வமான ஈடுபாடா என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டிய உண்மையான மற்றும் தீர்க்கமான தருணம் இது" எனக் குறிப்பிட்டு, மோதல் போக்கைக் கைவிடும்படி அவர் அமெரிக்கர்களுக்கு உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.


