அதிமுக - பாஜக கூட்டணி: "சதி வலையில் சிக்கியுள்ளது அதிமுக" - திருமாவளவன் கருத்து!
அதிமுக மீது பாஜக சவாரி செய்யத்தான் கூட்டணி அமைத்திருக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

பாஜகவுடன் கூட்டணி இல்லை எனத் தெரிவித்து வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ளார். அதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக மீது பாஜக சவாரி செய்யத்தான் கூட்டணி அமைத்திருக்கிறது எனவும், பாஜக கூட்டாணியே வேண்டாம் என எடப்பாடி இருந்தார், ஆனால் அதற்கு கட்சியில் ஒத்துழைப்பு இல்லை எனவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
இதுகுறித்து, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக மீது சவாரி செய்து தமிழ்நாட்டில் ஒரு பெரிய கட்சி போல் காண்பித்துக் கொள்ள வேண்டும் என்ற செயலில் பாஜக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அவர்களின் கொள்கையை சொல்லி தமிழ்நாட்டில் கால் ஊன்ற முடிவதில்லை. அதனால் இரண்டு திராவிட கட்சிகளில் ஒரு கட்சியை தோழமைக் கட்சி என்ற பெயரில் அரவணைத்து, அவர்களை வீழ்த்த வேண்டும் என்பதுதான் உண்மையான செயல்திட்டம்.
கட்சியில் ஒத்துழைப்பு இல்லை:
அந்த சதி வலையில் அதிமுக சிக்கிக் கொண்டிருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் ஒன்று சேர்வதில்லை என்ற முடிவை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே எடுத்திருந்தார். 2026 சட்டமன்ற பொது தேர்தலிலும் பாஜக அல்லாத ஒரு கூட்டணி அமைத்து திமுக கூட்டணியை எதிர்கொள்ள வேண்டும் என்றே விரும்பினார். ஆனால், அவருக்கு கட்சியில் இருக்கும் முன்னணி தலைவர்களே முழுமையான ஒத்துழைப்பை கொடுக்கவில்லை, அவரின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்கவில்லை என்று தான் தெரிகிறது.
வாக்கு வங்கிக்காக கூட்டணி:
பாஜக கொடுத்த அழுத்தத்தின் விளைவாக அரை மனதோடு தான் இந்த கூட்டணியை அமைத்திருக்க முடியும் என நான் கருதுகிறேன். பாஜக தனித்து நிற்க முடியாது, கூடுதலான இடங்களில் போட்டியிட்டு அதிமுக வாக்கு வங்கியை பாஜக வாக்கு வங்கியாக காண்பிப்பதற்கு, இந்த யுக்தியை கையாளுகிறது. இதனால், அதிமுகவிற்கு எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை. பாஜக ஒரு அரசியல் சக்தி என்று காட்டிக் கொள்வதற்கு இந்த களம் அவர்களுக்கு பயன்படும்.மனப்பூர்வமாக இந்த கூட்டணியை உருவாக்கவில்லை, எடப்பாடிக்கு இந்த கூட்டணியில் உடன்பாடு இல்லை என நான் கருதுகிறேன். டிடிவி தினகரன், ஓபிஎஸ், சசிகலா போன்றவர்களை அதிமுகவில் இணைப்பதற்கான முயற்சிகளை ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்தவர்கள் திரை மறைவில் மேற்கொண்டார்கள் என நான் கேள்விப்பட்டேன். அதற்கு எடப்பாடி பழனிசாமி உடன்படவில்லை.
அதன் பிறகு உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம் என்ற வாக்குறுதியை கொடுத்த பின்பு தான், எடப்பாடி பழனிசாமி இந்த கூட்டணிக்கு ஒத்துக் கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி இந்த நிபந்தனையை முன்வைத்து தான் பாஜகவை பணிய வைத்து இருக்கிறார் எனத் தெரிகிறது. நைனார் நாகேந்திரன் அதிமுக தொண்டராக இருந்து தமிழ்நாட்டில் அறியப்பட்டவர், அதிமுக தலைவர்களுடன் நெருக்கமாக களப்பணி ஆற்றியவர். ஆகவே அதிமுகவிற்கு ஒத்துழைப்பாக இருக்கும் என பாஜகவினர் நினைத்திருக்கலாம்," என்றார்.
சர்ச்சை பேச்சால் பதவி இழந்த பொன்முடி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, "பொன்முடியை முதலமைச்சர் துணை பொது செயலாளர் பதவியில் இருந்து நீக்கி, நடவடிக்கை எடுத்து இருக்கிறார். ஆகவே அதுகுறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை," இவ்வாறு தெரிவித்தார்.