Breaking News
நாடக மற்றும் ஊடகத்துறைப் பங்களிப்பும் அவரது பன்முக ஆளுமையும் தமிழுலகம் நன்கறிந்ததே.
தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட மற்றும் ஆவணப்பட நெறியாளர் அம்ஷன் குமார் இயக்கியுள்ளார்.

ஏ.சி.தாசீசியஸ் அவர்களின் நாடக மற்றும் ஊடகத்துறை.
ஏ.சி.தாசீசியஸ் அவர்களின் நாடக மற்றும் ஊடகத்துறைப் பங்களிப்பும் அவரது பன்முக ஆளுமையும் தமிழுலகம் நன்கறிந்ததே. அவருடைய நாடகத்துறைப் பயணத்தினைப் பிரதிபலிக்கும் வகையிலான ஆவணத் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.தமிழகத்தைச் சேர்ந்த திரைப்பட மற்றும் ஆவணப்பட நெறியாளர் அம்ஷன் குமார் அதனை இயக்கியுள்ளார். சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரி அதனைத் தயாரித்துள்ளது. அதன் நிறுவனர் அன்ரன் பொன்ராஜா உருவாக்கப் பணிகளை ஒருங்கிணைத்திருக்கின்றார்.
பல்துறை சார்ந்த பங்களிப்பினை தாசீசியஸ் அவர்கள் வழங்கியிருந்தாலும் அவருடைய அரங்கச் செயற்பாடுகள் குறித்த பயணமே படத்தில் முதன்மையாகப் பதிவாகியுள்ளது.
ஆவணப்படத்தினை கடந்த ஞாயிறு சுவிஸ் பேர்ண் நகரின் Cine ABC திரையரங்கில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. தாசிசியஸ் அவர்களோடு அவர் பற்றிய ஆவணப்படத்தினைப் பார்க்கக்கிடைத்தமை அரிய வாய்ப்பு. திரையிடலைத் தொடர்ந்து காத்திரமான விமர்சனபூர்வமான உரையாடலும் இடம்பெற்றது. தாசீசியஸ் அவர்கள் ஈழ மற்றும் புலம்பெயர் நாடகத்துறையில் அறுபது ஆண்டுகளுக்கு மேலான இயங்குதலைக் கொண்டிருப்பவர்.
புத்தாக்கப் படைப்பாக்கங்களுக்கான அடிப்படை என்பது வேரை அறிந்திருத்தல், அவற்றைத் தேடுதல் என்பதிலிருந்து தொடங்குகின்றது. அந்த வகையில் தாசீசியஸ் அவர்களின் அரங்க முயற்சிகளின் அணுகுமுறை முக்கியமானது. அதாவது தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள், பாரம்பரிய கலை வடிவங்களை அறிந்து அவற்றைத் தான் கற்ற நவீன அரங்க வடிவங்களோடு இணைத்து நாடகங்களை உருவாக்குகின்ற-நெறிப்படுத்துகின்ற அணுகுமுறை அதுவாகும். அந்த அணுகுமுறையே ஈழத்து அரங்குகளுக்கான புதிய போக்கினை உருவாக்கிய அவரது உத்தியும் அணுகுமுறையுமாகும்.
நாடகத்துறையில் அவரது வகிபாகம் பன்முகப்பட்டது. நடிகர், நாடகப் பயிற்சியார், பிரதியாக்குநர், நெறியாளர், ஈழத்து நாடகத்திற்கான கோட்பாட்டு உருவாக்கி எனவாக அவை பன்முகப் பரிமாணங்களைக் கொண்டவை. பயிற்சியாளர் எனும் போது அது நாடகக் கல்வியைக்குறிக்கின்றது. குரல் வளப்படுத்தல், மூச்சு முறைமைகள், உடல் மொழிப் பயன்பாடு ஆகிய பயிற்சிகள் அதற்குள் அடங்குகின்றன.
1960களின் ஆரம்பத்தில் ஏனையவர்களின் பிரதிகளை நெறியாள்கை செய்தவர். பின்னர் சொந்தப் பிரதிகளையும் நெறியாள்கை செய்திருக்கின்றார். ஈழத்து நாடகத்துறையில் முத்திரை பதித்த பல நாடகங்களை உருவாக்கியிருக்கின்றார். இன்றும் அவற்றிற் பல முன்னுதாரணமானவையாகவும் ஈழத்து நாடகத்துறையில் பாய்ச்சல் என்று கருதப்படுகின்றன. ஈழத்து நாடகத்திற்கான தனித்துவமான அடையாளத்தையும் பாதையையும் வகுத்தவர்களில் தாசீசியசின் பங்கு தனித்துவமானது. இந்த ஆவணப்படத்தில் அவரது முன்னோடிகளும், அவரோடு இணைந்து பணியாற்றியவர்களும் அவரால் நாடகத்துறையில் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் எனவாகப் பல்வேறு அரங்கத்துறை ஆளுமைகள் அவரது வகிபாகம் தொடர்பான கருத்துகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். அம்ஷன் குமாரின் இயக்கத்தில் ஆவணப்படத்திற்குரிய தொழில்நுட்ப நேர்த்தி பிரதிபலிக்கின்றது.