காணியை விடுவிக்க வந்த அர்ச்சுனா; கள்ள உறுதி என்றால் நிரூபித்து காட்டுங்கள்! தையிட்டி உரிமையாளர்கள் சவால்!
வைத்தியருக்கே பைத்தியம் பிடித்தால் எந்த வைத்தியரிடம் போவது!
தையிட்டியில் போராடும் மக்களிடம் கள்ள உறுதி தான் உள்ளது என்று அர்ச்சுனா சொன்னதை ஏற்க முடியாது. முடிந்தால் தையிட்டியில் போராடுபவர்களின் காணி உறுதி பொய் என்பதை அர்ச்சுனா நிரூபிக்கட்டும் என தையிட்டி காணி உரிமையாளர்கள் சவால் விடுத்தனர்.
யாழ் ஊடக அமையத்தில் சட்டவிரோத தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் நடத்திய ஊடக சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கையில்,
சிங்கள மக்களுக்காக தமிழ் மக்களின் காணிகளை அர்ச்சுனா பெற்றுக் கொடுக்க வேண்டாம். நீங்கள் எதிர்காலத்தில் இங்கு போட்டியிட்டும் வெல்லப் போவதில்லை. தையிட்டி மக்களின் காணிகள் பற்றி தேவையில்லாத கதைகளை சொல்ல வேண்டாம்.
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தையிட்டி பிரச்சினையை அலசி ஆராய வேண்டும். எத்தனை பரப்பு ஒரு ஏக்கர் என்று தெரியாத ஒரு வழக்கறிஞரும், எல்லோரையும் எத்தனையாம் தரம் படித்தார்கள் என்று கேட்கிற பாராளுமன்ற உறுப்பினரும் தையிட்டிக்கு வந்து ஆராய்ச்சி செய்கிறார்கள்.
அர்ச்சுனா இராமநாதனை தொடர்பு கொள்ள முடியவில்லை. செயலாளர் என்ற பெண்ணை தொடர்பு கொண்டு விளங்கப்படுத்தினேன்.
போராட்டத்தின் நிமித்தம் பிக்கு இறங்கி வந்திருக்கிறார். கொஞ்சம் காணியை விட்டு ஏமாற்றி விட நிற்கிறார்கள் இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அங்கு போய் பேசுகிறார்.
24 மணி நேரமும் நேரலை போட்டு செல்கிறார்கள். நாம் எந்த அலுவலகத்திற்கு சென்று அவர்களை சந்திப்பது?
நாங்கள் போராடுவதாகவும் கத்துவதாகவும் வைத்தியர் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்தார். சாவகச்சேரி வைத்தியசாலையில் போராடியே அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். வைத்தியர் கேதீஸ்வரனுக்கும் வைத்தியர் பிரணவனுக்கும் வைத்தியர் சத்தியமூர்த்திக்கும் எதிராக ஆதாரங்கள் இருக்கிறது என்று சொல்லி பல விடயங்களை சொன்னார். அந்த ஆதாரங்களை கொண்டு முதலில் வழக்கை போடட்டும். அந்த வழக்கை நடத்தி விட்டு இங்கு வாருங்கள்.
நேரத்துக்கு நேரம் ஒன்றை உளறாமல் செயல்படுங்கள். நீங்கள் தகுந்த வைத்தியராக இருந்தால் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு போகவில்லை என்று சொன்னால் எங்கள் பிரச்சனை இருந்து விலகுங்கள். கதைக்கும் போது நிதானமாக கதைக்க வேண்டும். உங்கள் வார்த்தை தடுமாறுகிறது. தமிழர் மரபை மீறி கதைக்கின்றீர்கள். கலாசாரத்தை மீறி கதைக்கின்றீர்கள்.
தேசிய தலைவரை பற்றி பேசுகிறீர்கள். அனைவரையும் எத்தனையாம் வகுப்பு படித்தது என கூறுகிறீர்கள். முன்னர் இந்த மண்ணை ஆண்டவர்கள் எத்தனையாம் தரம் படித்திருந்தார்கள் என்பதை தெரிந்திருந்தால் அது பற்றி கேட்க மாட்டீர்கள்.
வாகனத்துடன் கதைத்துக் கொண்டு நேரலை போட்டால் காவல்துறை என்ன தண்டம் கொடுக்கும் என்று உங்கள் சகோதரை கேளுங்கள்.
ஆட்களை தனிப்பட்ட ரீதியாக தாக்க வேண்டாம். உங்கள் மீது மதிப்பு இருக்கிறது. பாராளுமன்றத்தில் கத்துவதற்கு ஆள் தேவை. சரியான விடயத்திற்கு அதை செய்யுங்கள் - என்றனர்.


