"நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலையா".. தமிழச்சி தங்கபாண்டியன், மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!
,

டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் நேற்று சென்னைக்கு வந்த திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனின் இருக்கை முன்னறிவிப்பின்றி மாற்றம் செய்யப்பட்டதற்கு, "ஒரு எம்.பிக்கே இந்த நிலை என்றால், சாதாரணம் மக்களை எப்படி நடத்துவார்கள்" என கண்டனம் தெரிவித்திருந்தார். தற்போது, இச்சம்பவத்ற்கு, தமிழச்சி தங்கபாண்டியனிடம் ஏர் இந்தியா விமான நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
நடப்பாண்டிற்கான (2025 - 2026) நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முதற்கட்ட கூட்டத்தொடர் ஜனவர் 31ஆம் தேதி தொடங்கிய நிலையில், பிப்ரவரி 13 வரை நடைபெற்றது. இதில், கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றிருந்த தமிழ்நாடு எம்பிக்கள் நேற்று (பிப்.13) இரவு விமானங்களில் சென்னை திரும்பினர்.
முன்னறிவிப்பின்றி மாற்றப்பட்ட எம்.பியின் இருக்கை:
அதன்படி, தென் சென்னை தொகுதி திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் நேற்று இரவு டெல்லியில் இருந்து ஏர் இந்தியா ஏஐ 540 பயணிகள் விமானம் மூலம் சென்னை திரும்பினார். அப்போது, ஏர் இந்தியா விமானத்தில் உயர் வகுப்பான பிசினஸ் கிளாஸ் (Business class) டிக்கெட் முன்பதிவு செய்து, தமிழச்சி தங்கபாண்டியனின் அந்த டிக்கெட் உறுதிப்படுத்தப்பட்டு இருந்துள்ளது. ஆனால், டெல்லியில் இருந்து விமானத்தில் ஏறும்போது, அவருக்கு பிசினஸ் கிளாஸ் இருக்கை ஒதுக்காமல், சாதாரண எகானமி கிளாஸில் (Economy class) டவுன் கிரேட் செய்து இடம் ஒதுக்கப்பட்டிருந்துள்ளது.
அதனால், அதிர்ச்சியடைந்த எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் இதுகுறித்து ஏர் இந்தியா அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அப்போது, "ஒருசில நேரங்களில் நிர்வாக காரணங்களுக்காக இதுபோல் வேறு கிரேட் கிளாஸ்களுக்கு மாற்றுவது வழக்கம், அதுபோல் மாறிவிட்டது" என்று கூறியுள்ளனர். இதற்கு எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், "எனக்கு எந்தவித அறிவிப்பும் கொடுக்காமல் நீங்கள் எப்படி என்னுடைய வகுப்பை மாற்றலாம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பின்னர், இதுதொடர்பாக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் தனது (X) எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஏர் இந்தியா நிர்வாகத்திற்கும், ஒன்றிய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர்க்கும் இந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள எனக்கே இதுபோன்ற சம்பவம் நடந்தால், சாதாரண பயணிகளை இந்த ஏர் இந்தியா நிர்வாகம் எப்படி நடத்தும்? என்பதை நினைத்துப் பார்க்கவே நடுக்கமாக உள்ளது.
பயணிகளின் உரிமைகள் மற்றும் சேவையில் இப்படி அலச்சியம் காட்டுவது அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற தவறான நிர்வாகத்திற்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
ஏர் இந்தியா மன்னிப்பு: இந்த பதிவுக்குப் பதிலளித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், "தமிழச்சி தங்கபாண்டியனிடம் மன்னிப்பு கேட்டு, வருத்தம்" தெரிவித்துள்ளனர். அதோடு, "இது சம்பந்தமாக உங்களிடம் நாங்கள் பேச விரும்புகிறோம். உங்களுக்கு வசதியான நேரத்தில் எங்களுக்கு அதற்கான நேரம் ஒதுக்கிக்கொடுங்கள்" எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழச்சி தங்கபாண்டியனுக்கு அண்ணாமலை பதில்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பதிவில், "இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கக் கூடாது. என்றாலும், பதிவியிறக்கம் என்றால் என்ன என்பதை தமிழ்நாட்டில் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கூற வேண்டிய சரியான நேரம் இது. "ஒரு எம்.பியையே இப்படி நடத்தினால்" என்று சொல்லக்கூடிய உரிமை, வம்சாவளி அரசியலில் உள்ள ஒருவரின் மனப்பான்மையைக் காட்டுகிறது.விடியலின் வாக்குறுதியுடன், தமிழ்நாடு கடந்த 4 ஆண்டுகளாக இருள் சகாப்தத்தில் மூழ்கியுள்ளது. இந்த திமுக அரசாங்கத்தின் கீழ், தமிழ்நாட்டு மக்களின் நிலைமையை விவரிக்க "தரமிறக்கப்பட்டது" என்ற வார்த்தை கூட ஒரு மென்மையான வார்த்தையாகத் தான் தெரிகிறது. ஆகையால், இது கடவுள் கடுமையான உண்மையை தெரிவிக்கும் ஒரு வழியாக இதை நினைத்துப் பாருங்கள் தமிழச்சி தங்கபாண்டியன் அக்கா" எனக் குறிப்பிட்டுள்ளார்.