இயக்குநர் ஷங்கர் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை! 'எந்திரன்' திரைப்பட வழக்கு'.
அமலாக்கத்துறை நடவடிக்கை மூலம் இயக்குநர் ஷங்கருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை

எந்திரன் திரைப்பட விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனது ஜிகுபா கதையை திருடி, எந்திரன் என்ற பெயரில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் திரைப்படமாக வெளியிட்டதாகவும், இது காப்புரிமை சட்டத்தை மீறியுள்ளதால் தனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என ஆரூர் தமிழ்நாடன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் அடிப்படையில், இயக்குநர் ஷங்கர் எந்திரன் படத்திற்கு சம்பளமாக வாங்கிய 11 கோடி ரூபாயை சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக ஷங்கருக்கு சொந்தமான 10 கோடியே 11 லட்சம் ரூபாய் அசையா சொத்துக்களை பிப்.20ஆம் தேதி அமலாக்கத்துறை முடக்கி உத்தரவிட்டது.
அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக இயக்குநர் ஷங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வில் இன்று (மார்ச் 11) விசாரணைக்கு வந்தது. அப்போது, ஷங்கர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், எந்திரன் படத்தின் கதை விவகாரத்தில் ஷங்கர் காப்புரிமை சட்டத்தை மீறவில்லை எனவும், ஆரூர் தமிழ்நாடன் தாக்கல் செய்த மனுவில் ஷங்கருக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ளதாக தெரிவித்தார்.
இந்நிலையில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. எந்திரன் திரைப்படத்தின் கதைக்காக மட்டும் 11.5 கோடி ரூபாய் ஊதியத்தை ஷங்கர் பெறவில்லை, மற்ற பணிகளுக்காகவும் பெற்றுள்ள நிலையில் சொத்துக்களை அமலாக்கத்துறை எப்படி முடக்க முடியும் என கேள்வி எழுப்பினார். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நபர் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றம் நடந்துள்ளதாக கூறி வழக்குப்பதிவு செய்ய முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், தனி நீதிபதி ஷங்கருக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ள நிலையில், புகாரின் இறுதி முடிவுக்காக காத்திருக்காமல் தற்போது நடவடிக்கை எடுத்தது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், குற்றம் நடந்ததற்கான முகாந்திரம் இருந்தால் தனி நபர் அளிக்கும் புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யலாம் எனக் கூறினார்.
மேலும், அமலாக்கத்துறை நடவடிக்கை மூலம் இயக்குநர் ஷங்கருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், இந்த வழக்கை அமலாக்கத்துறையிடம் அவர் எதிர்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். இதனையடுத்து, இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.