நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) ஒரு தூண்,மனித உரிமைகளின் மாபெரும் ஆளுமை - த. குமார் அவர்கள்!
தமிழ் இளைஞர்களைத் திரட்டி, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) நிறுவனர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
மனித உரிமைகளின் மாபெரும் ஆளுமையும், தமிழர்கள் போராட்டத்தின் வியூகம் சார்ந்த தூணுமான த. குமார் அவர்களின் மறைவிற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) இரங்கல் தெரிவிக்கிறது.
குமார் அவர்களின் பெயரில் பொதுவாக்கெடுப்பிற்கான ஒருமித்த செயற்பாட்டிற்கான அழைப்பு!
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) மற்றும் உலக மனித உரிமைகள் சமூகம், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் (AIUSA) முன்னாள் வழிகாட்டல் இயக்குநர் மற்றும் புகழ்பெற்ற மனித உரிமை பாதுகாவலர் திரு த. குமார் அவர்களின் மறைவால் ஆழ்ந்த துக்கத்தில் மூழ்கியுள்ளது. அவர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தொடக்க காலத்திலிருந்தே ஒரு முக்கியமான நபராக இருந்தார்.
திரு. த. குமார் ஒரு ஆலோசகர் மட்டுமல்ல; அவர் ஒரு மூலோபாய தொலைநோக்குடையவர். தான் அனுபவித்த அடக்குமுறைகளையே நீதிக்கான வாழ்நாள் போராட்டமாக மாற்றியவர்.
இலங்கை தீவின் சிறைச்சாலையிலிருந்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் (Congress) மண்டபங்கள் வரை அவரது வாழ்க்கை “உலகில் எங்காவது ஒரு இடத்தில் இழைக்கப்படும் அநீதிஇ எல்லா இடங்களிலும் உள்ள நீதிக்கு அச்சுறுத்தலாகும்” என்ற கொள்கைக்குச் சான்றாக அமைந்தது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) ஒரு தூண்
2010-ல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவானது முதல், த. குமார் ஒரு விலைமதிப்பற்ற ஆலோசகராக பணியாற்றினார். தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடனான தொடர்புகளில் அவர் ஒரு திசைகாட்டியாகச் செயல்பட்டார்.
"குமார் ஒரு தந்திரோபாய நிபுணர் மற்றும் ஒரு சிறந்த ஆலோசகர், ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக அவர் ஒரு கனிவான மனிதர்" என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி. உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியப் போராட்டத்திற்கு அவரது முக்கிய பங்களிப்புகள்:
• நீதிக்கான கட்டமைப்பு (MAP): 2015-ல் ஐநா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தைத் தொடர்ந்து உருவான கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் குழுவின் (MAP) முதன்மை வடிவமைப்பாளர் இவரே.
• மில்லியன் கையெழுத்து இயக்கம்: சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) பாரப்படுத்துமாறு கோரி 1.6 மில்லியன் கையெழுத்துகளைத் திரட்டிய பிரச்சாரத்தில் இவர் முக்கிய பங்கு வகித்தார்.
• பொதுவாக்கெடுப்பு (Referendum): தமிழ் மக்களின் பொதுவாக்கெடுப்புக் கோரிக்கையை வெறும் அரசியல் கோரிக்கையாகப் பார்க்காமல், ஒரு அடிப்படை மனித உரிமைப் பிரச்சினையாக உலக அரங்கில் முன்வைத்தார்.
• தமிழீழ விடுதலைப் பட்டயம் (Freedom Charter): 2013-ல் அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களின் பங்கேற்புடன் தமிழீழ விடுதலைப் பட்டயம் வெளியிடப்படுவதில் முக்கிய பங்காற்றினார்.
• செம்மணி புதைகுழிகள்: தனது இறுதி மாதங்களில், செம்மணி மனிதப்புதைகுழிகளை அகழ்வாராய்ச்சி செய்யும் பணியை ஐநா மனித உரிமைகள் ஆணையர் நேரடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
• வழிகாட்டி (Mentor): புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்து நிர்வாக மற்றும் கொள்கை ரீதியான ஆலோசனைகளை வழங்கினார்.
"மனச்சாட்சியின் கைதி" முதல் உலகளாவிய வழக்கறிஞர் வரை
குமாரின் செயல்பாடு 1960-களின் இறுதியில் தொடங்கியது. ஒரு இளைஞனாக, கிழக்கு மாகாணத்தில் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் ஆற்றிய மறுவாழ்வுப் பணிகள் "லங்கா ராணி" (Lanka Ranee) என்ற புத்தகத்தில் போற்றப்பட்டுள்ளன. தமிழ் இளைஞர்களைத் திரட்டி, தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) நிறுவனர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
சுமார் ஐந்து ஆண்டுகள் விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்திலும், அவர் தளராமல் 24 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இவரை நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்களின் வரிசையில் வைத்து "மனச்சாட்சியின் கைதி" (Prisoner of Conscience) என்று அங்கீகரித்தது.
வாஷிங்டன் மற்றும் உலக அரங்கில் ஒரு குரல்
அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் புகுந்த பிறகு, அவர் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் இயக்குநராக 22 ஆண்டுகள் பணியாற்றினார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் சாட்சியமளிப்பது முதல், வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிப்பது வரை உலகளாவிய மனித உரிமைப் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்தார்.
முடிவுரை மற்றும் அழைப்பு
குமார் அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். தற்போது தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த ஒற்றுமையைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் பொதுவாக்கெடுப்பு கோரிக்கைக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
வீர வணக்கம், த. குமார்.
விசுவநாதன் ருத்திரகுமாரன்
பிரதமர்இ நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்


