’லியோ’, ’அமரன்’ திரைப்படங்களில் காட்டப்பட்டது பெஹல்காம் தான்... நினைவுகூர்ந்த படக்குழு!
விஜய்யின் லியோ மற்றும் சிவகார்த்திகேயனின் அமரன் ஆகிய இரு படங்களும் பெஹல்காமில் படம் பிடிக்கப்பட்டவை.

விஜய்யின் ’லியோ’ மற்றும் சிவகார்த்திகேயன் ’அமரன்’ ஆகிய இரு படங்களும் பெஹல்காமில் படப்பிடிக்கப்பட்ட நினைவுகளையும் பயங்கரவாத தாக்குதலுக்கு இரங்கலையும் படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் அனந்நாக் மாவட்டத்தில் உள்ள பெஹல்காமில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்.22) தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் இதில் அடங்குவர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பயங்கரவாத தாக்குதலையடுத்து பெஹல்காம் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்திய ராணுவம் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது.
இந்த தாக்குதலுக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்த தாக்குதலுக்கு எதிராக இந்திய திரையுலகைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து இரங்கல்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான விஜய்யின் லியோ மற்றும் சிவகார்த்திகேயனின் அமரன் ஆகிய இரு படங்களும் பெஹல்காமில் படம் பிடிக்கப்பட்டவை. இந்நிலையில் லியோ படத்தின் ஒளிப்பதிவளார் மனோஜ் பரமஹம்சா மற்றும் அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் பெஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து இரங்கல்களையும் படப்பிடிப்பு நினைவுகளையும் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தனது எக்ஸ் பக்கத்தில், “லியோ திரைப்படம் முழுவதும் பெஹல்காமில் தான் படம்பிடிக்கப்பட்டது. ஆனால் இத்தனை அழகான சிறிய நகரத்தில் இப்படியான ஒரு மோசமான நினைவுகளை நான் என்னுடன் வைத்துக் கொள்ள விரும்பவில்லை. பெஹல்காம் தாக்குதல் சோகமானது!” என பதிவிட்டுள்ளார்.
‘அமரன்’ பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனது எக்ஸ் பக்கத்தில், ”அப்பாவி மனிதர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதல் ஒட்டு மொத்த மனிதகுலத்திற்கும் அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் கொடுக்கப்பட்ட மரண அடியாகும்.
ஆண்டுதோறும் 2 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து சொல்லக் கூடிய காஷ்மீர் சுற்றுலாவின் இதயம் போன்றது அழகான பெஹல்காம். அமரன் படத்தின் படப்பிடிப்பின் போது அற்புதமான அனுபவங்கள் அங்கு கிடைத்தன. அங்கு வாழக்கூடிய மக்கள் சுற்றுலாப் பயணிகளிடம் மிகவும் கனிவாக நடந்து கொண்டார்கள்.
இந்த தாக்குதலில் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் எனது பிரார்த்தனைகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
’அமரன்’ திரைப்படமானது தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரான மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. மேஜர் முகுந்த் வரதராஜன், காஷ்மீரில் 2014 ஆம் ஆண்டு இந்திய ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீரமரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நடிகர்கள் கமல்ஹாசன், ஆண்ட்ரியா, கீர்த்தி சுரேஷ், ரவி மோகன் ஆகியோர் இந்த தாக்குதலை கண்டித்தும் இரங்கல் தெரிவித்தும் தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.