பலதும் பத்தும். 25,09,2025 - பாலஸ்தீனத்தை சுதந்திர தனி நாடாக அங்கீகரிப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு!
ட்ரம்பின் நிலைப்பாட்டுக்கு மெக்ரோனின் பதிலடி ; நோபல் பரிசு
பாலஸ்தீனத்தை சுதந்திர தனி நாடாக அங்கீகரிப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு
ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆபத்தானது என்றாலும், அதை எதிர்த்துப் போராடாமல் இருப்பது இன்னும் ஆபத்தானது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஊழலுக்கு எதிரான போராட்டம் உலகின் ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்தை வெளியிட்டார்.
போதைப்பொருள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் இன்று உலகின் புதிய பிரச்சினையாக மாறிவிட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிப்பதாகவும், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து ஆதரவையும் வழங்குவதாகவும் மேலும் கூறினார்.
இந்தியக் கடல் பரப்பில் சட்டவிரோத நடவடிக்கை
இந்தியக் கடல் பரப்பில் சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்கும், போதைப்பொருள் கடத்தலைத் தடுத்து நிறுத்துவதற்கும் அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
"மாற்றமடைந்து வரும் இயக்கவியலின் கீழ் இந்தியக் கடல் பரப்பின் கடல்சார் நோக்கு" என்ற தொனிப்பொருளில் இலங்கை கடற்படையால் 12ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட "காலி கலந்துரையாடல் 2025" சர்வதேச கடல்சார் மாநாட்டில் உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கே மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,
"பல வருடங்களாக, இந்த கலந்துரையாடல் இந்தியக் கடல் பரப்பின் எதிர்காலம் குறித்த விவாதங்களுக்கான சர்வதேச தளமாக இருந்து வருகின்றது.
மல்லாகம் நீதவான்
மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜெகநாதன் சுபராஜனி பதவி விலகி உள்ளதாக மல்லாக நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் பதவி விலகியதற்கான காரணம் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிய கிடைக்கவில்லை என மல்லாகம் நீதிமன்ற மூத்த சட்டத்தரணி ஒருவர் உறுதிப்படுத்தினர்.
அவர் பதவி விலகிய பொழுது தனது ஆவணங்களையும் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் யானைத் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொண்டுகள்சேனை, பூலாக்காடு, சீல்லிக்கொடி பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவரை யானைத் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
பெரிய வேதம், பூலாக்காடு, கிரான் பகுதியைச் சேர்ந்த 63 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
நேற்று முன்தினம் (23) காலை மீன் பிடிப்பதற்காக சென்றவர், இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் தேடிச் சென்றபோது இன்று (25) காலை யானைத் தாக்குதலுக்குள்ளாகி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் வாழைச்சேனை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ட்ரம்பின் நிலைப்பாட்டுக்கு மெக்ரோனின் பதிலடி ; நோபல் பரிசு
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வேண்டுமென்றால், காஸா போரை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மெக்ரோன் கூறுகையில் , “ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் காஸாவில் அமைதி திரும்ப வேண்டுமென ட்ரம்ப் வலியுறுத்தினார்.
காஸா மீதான போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பால் அழுத்தம் தர முடியும். காஸா மீது போரை நடத்துவதற்கு அமெரிக்கா ஆயுதங்களையும், உபகரணங்களையும் வழங்குகிறது.
அமெரிக்காவுக்கு மட்டுமே காஸா போரை முடிவுக்கு கொண்டு வரும் ஆற்றல் உள்ளது. ஏற்கனவே ஏழு போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக பெருமிதம் தெரிவிக்கும் ட்ரம்ப், காஸா போரை நிறுத்த வேண்டும்.
காஸா போரை நிறுத்தினால் மட்டுமே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும்,”இவ்வாறு தெரிவித்தார்.


