யாழ் மானிப்பாய் பிரதேச வைத்தியாசாலையில் பகலில் நோயாளார் காவு வண்டி ஓடாது!
பெரும்பாலான மக்களின் நலனை கருத்தில் கொண்டு இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் - மக்கள் கோரிக்கை
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஆணைக்கோட்டை பகுதியில் அமைந்திருக்கிறது மானிப்பாய் பிரதேச வைத்தியாசாலைக்கு செல்லும் நோயாளிகளை மேலதிக சிகிச்சைக்கு யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல நோயாளர் காவு வண்டி ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
ஆனால் அந்த நோயாளர் காவு வண்டி இரவில் மட்டும்தான் சேவையில் ஈடுபடும் என்றும், பகலில் நோயாளர் காவு வண்டி வைத்தியசாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் ஆனால் சேவையில் ஈடுபடுவதில்லை என்றும், இதனால் குறித்த வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற செல்லும் நோயாளர்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருவதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றார்கள்.
மேலும் இது தொடர்பில் குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற சென்றவர்கள் விசாரித்த போது, மானிப்பாய் பிரதேச வைத்தியாசாலையில் சேவையில் ஈடுபடும் நோயாளர் காவு வண்டி சாரதி பகல் வேளையில் குறித்த வைத்தியசாலையில் இருந்து யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு சென்று அங்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள வாகனங்களை செலுத்துவதாக கூறியுள்ளார்கள்.
இந்த நிலையில் இது தொடர்பில் மேலதிக தகவல்களை திரட்டியபோது, ஏற்கனவே யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் தேவைக்கேற்ப சாரதிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றமை தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் மேலதிக நேரத்திற்கான கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் மானிப்பாய் பிரதேச வைத்தியாசாலையின் நோயாளர் காவு வண்டி சாரதி செயற்பட்டு வருகின்றாரா எனவும் அதற்கு யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகள் உடந்தையாக இருக்கிறார்களா என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது. ஆகவே வடக்கு மாகாண ஆளுநர், சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கின்ற பெரும்பாலான மக்களின் நலனை கருத்தில் கொண்டு இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


