போர் பதற்றம்: இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக களமிறங்கும் ஸ்டாலின்.. முக்கிய அறிவிப்பு!
தேச ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்கும் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டு மக்கள் இந்த பேரணியில்

பாகிஸ்தானுக்கு எதிராக தீரத்துடன் சண்டையிட்டு வரும் இந்திய ராணுவ வீரர்களுக்கு நமது ஆதரவை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டிருக்கும் சூழலில், நமது ராணுவத்துக்கு ஆதரவாக நாளை (மே 10) பேரணி நடத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியா நடத்திய துல்லிய தாக்குதலால் பாகிஸ்தான் ஆடிப் போனது. இதில் பல தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இதனால் கோபமடைந்த பாகிஸ்தான், இந்தியா மீது ஏவுகணை, டிரோன் தாக்குதல்களை நடத்தியது. ஆனால், இந்த தாக்குதல்களை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது.
எனினும், தற்போது இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருவதாகவும், லாகூர், இஸ்லாமாபாத் உள்ளிட்ட நகரங்களில் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வருகின்றன. எனினும், இந்திய ராணுவம் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
எல்லையில் நடக்கும் இந்த மோதல் காரணமாக, இரு நாடுகள் இடையே போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பாதுகாப்பும், கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் உள்ள 24 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்களிலும் போர் ஒத்திகையும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு களமிறங்கியுள்ளது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், "பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும், தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்தி வரும் இந்திய ராணுவத்திற்கு நமது ஒன்றுபட்ட ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. அதனை வெளிப்படுத்தும் வகையில் ஒரு பேரணியை நாளை மாலை 5 மணிக்கு சென்னையில் உள்ள காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் எனது தலைமையில் நடைபெறவுள்ளது.
இதில் முன்னாள் படை வீரர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என அனைத்து தர்பபினரும் கலந்து கொள்வார்கள். இந்த பேரணி தீவுத்திடலில் அருகே உள்ள போர் நினைவுச் சின்னம் அருகில் நிறைவு பெறும்.
இந்த பேரணியானது, இந்திய ராணுவத்தின் வீரத்தையும் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் போற்றுவதற்கும், தேச ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்கும் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டு மக்கள் இந்த பேரணியில் பங்கேற்று நமது ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.