தலைக்கவசம் அணிந்து நடமாடுபவர்களுக்கு சோதனை நடவடிக்கை- பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!
,

முகத்தை முழுமையாக மறைக்கும் பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் கண்காணித்து சோதனை நடாத்தப்பட வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த காலங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் கொலை உள்ளிட்ட கடுமையான குற்றச் சம்பவங்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தமது தலை மற்றும் முகங்களை மறைக்கும் வகையில் தலைக்கவசங்களை அணிந்திருப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்றாலும், அது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்னால் பயணிப்பவர்களின் பாதுகாப்பிற்காக மட்டுமே என்பதை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே தனிநபர்கள் மோட்டார் சைக்கிளில் பயணிக்காத போது தேவையில்லாமல் தலைக்கவசம் அணிந்திருப்பதைக் கண்டால் அல்லது சந்தேகத்திற்கிடமான முறையில் செயல்படுவது போல் தோன்றினால் அந்த நபரையும் அவரது உடமைகளையும் சோதனை செய்யுமாறு அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும், பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.