ஜனாதிபதி தலைமையில் பதுளை மாவட்ட சிறப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கு நடவடிக்கை.
ஜனாதிபதி தலைமையில் பதுளை மாவட்ட சிறப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கும், அடிப்படை உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்யும் பதுளை மாவட்ட சிறப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (13) பிற்பகல் ஊவா மாகாண நூலக அரங்கில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த அனர்த்தத்தால் பதுளை மாவட்டத்தில் 26,517 குடும்பங்களைச் சேர்ந்த 90,667 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தோட்டத் தொழிலாளர் குடியிருப்புகள் 77 மற்றும் கிராமப்புற வீடுகள் 507 முற்றிலும் சேதமடைந்துள்ளன. மேலும், அதிக ஆபத்தான நிலையில் உள்ள வீடுகளாக 1,376 தோட்ட வீடுகளும் 1,474 கிராமப்புற வீடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன்படி, பதுளை மாவட்டத்தில் மொத்தமாக 3,434 குடும்பங்களை மீளக் குடியேற்ற வேண்டிய நிலை உள்ளது.
மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் அதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து ஜனாதிபதி அவர்கள் பிரதேச செயலாளர் பிரிவு வாரியாக தனித்தனியாக தகவல்களை கேட்டறிந்தார். மீள்குடியேற்றத்திற்காக தற்போது தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திவரும் அரசாங்க நிலங்களை விரைவாக மீட்குவது குறித்தும் விசேடமாக கலந்துரையாடப்பட்டது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கிடையில் ஒப்புதல் கிடைத்தவுடன் வீடமைப்பு பணிகளை உடனடியாக ஆரம்பிக்க முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மீள்குடியேற்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை மேலும் வலியுறுத்திய ஜனாதிபதி, அறிக்கைகள் மற்றும் திட்டங்களைத் தாண்டி வீடுகளை இழந்த மக்களுக்குள் புதிய வீட்டின் உரிமை குறித்த நம்பிக்கையை உருவாக்க வேண்டியது அவசியம் என குறிப்பிட்டார்.
வேறு இடத்துக்கு செல்ல தயக்கமுள்ள மக்களுக்கு தீர்மானம் எடுக்க அதிகபட்சமாக ஜூன் 15 வரை கால அவகாசம் வழங்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டார்.
அதேபோல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகைகள், வாழ்வாதார இழப்பீடு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு, வீட்டு வாடகை உதவி மற்றும் உயிரிழப்புகளுக்கான இழப்பீட்டு வழங்கல் ஆகியவற்றின் முன்னேற்றத்தையும் ஜனாதிபதி தனித்தனியாக ஆய்வு செய்தார். டிட்வா அனர்த்தத்தால் நெல் வயல்கள் மற்றும் விவசாய நிலங்களில் தேங்கிய மணல் மற்றும் கற்களை அகற்றும் பணிகளும் கவனிக்கப்பட்டன.
இதற்காக ஒரு ஏக்கருக்கு ரூ.25,000 வழங்கவும், விவசாய அமைப்புகளின் பங்களிப்புடன் இந்த திட்டத்தை செயல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. டிட்வா சூறாவளியால் சேதமடைந்த பதுளை மாவட்ட வீதி அபிவிருத்தி பணிகளும் விசேட கவனத்துக்கு கொண்டு வரப்பட்டன. வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உட்பட்ட சேதமடைந்த 21 வீதி பணிகளை இந்த ஆண்டுக்குள் முடிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார்.
மாகாண வீதி அபிவிருத்திக்கான திட்டங்கள் மற்றும் நிதி தேவைகள் குறித்தும் ஜனாதிபதி ஆராய்ந்தார்.
அனைத்து வீதிகளுக்கும் தேவையான நிதி மதிப்பீடுகளை தயாரித்து பணிகளை விரைவுபடுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். டிட்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கும் பணிகளில் நிதி பற்றாக்குறையை எந்த நிலையிலும் தடையாகக் கருத வேண்டாம் என்றும், இந்த ஆண்டுக்குள் ஏற்பட்ட சேதங்களை சீரமைத்து, அடுத்த ஆண்டிலிருந்து பதுளை மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்கத் தயாராக இருக்குமாறும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்வில் பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் மற்றும் தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்தா வித்தியாரட்ன. இணைத் தலைவர் மற்றும் ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி Kapila Jayasekara, சுற்றுலா துணை அமைச்சர் Ruwan Ranasinghe, இளைஞர் விவகாரங்கள் துணை அமைச்சர் Dinindu Saman Hennayake, பாராளுமன்ற உறுப்பினர்கள் கிட்ணன் செல்வராஜ் மற்றும் Ravindra Bandara உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் பதுளை மற்றும் பண்டாரவெல மாநகர சபை மேயர்கள், பிரதேச சபை தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஊவா மாகாண பிரதம செயலாளர், மாவட்ட செயலாளர், அரச அதிகாரிகள், துறைத் தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவு பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது
- ராமு தனராஜா


