புதிய சட்டம் உருவாக்கப்படும் வரை பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படும் – அரசாங்கம் அறிவிப்பு
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு இல்லை என கூறுகின்ற அரசாங்கம், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்துள்ளது.

‘புதிய சட்டமொன்று நிறைவேற்றப்படும் வரையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது’ என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (25) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
‘பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படுமென ஆட்சியமைப்பதற்கு முன்னர் தற்போதைய கூறியிருந்த போதிலும், தற்போதும் அந்த சட்டம் பயன்படுத்தப்படுகிறது’ என்று ஊடகவியலாளர் ஒருவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.
நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு இல்லை என கூறுகின்ற அரசாங்கம், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாகவும் குறித்த ஊடகவியலாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, ‘விருப்பமிருந்தாலும், இல்லாவிட்டாலும் தற்போது உள்ள சட்டத்தின் அடிப்படையிலேயே செயற்பட வேண்டியுள்ளது’ என்று தெரிவித்தார்.’இவ்வாறான குற்றச் செயல்கள் தொடர்பில் தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது’. ‘எனவே, புதிய சட்டமூலமொன்றை முன்வைத்து அதனை நிறைவேற்றியதன் பின்னர் இவ்வாறான விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்குள் மேலும் பல உயிரிழப்புகள் ஏற்படக் கூடும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘எனவே, தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது’.
எவ்வாறாயினும் விரைவில் தேசிய பாதுகாப்புக்கான சட்டமொன்றை உருவாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ‘இணையவழி பாதுகாப்பு சட்டத்தையும் மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கிறது’ என்றும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான பரிந்துரைகளை முன்வைக்குமாறு விடயத்துடன் தொடர்புடைய தரப்பினருக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.