யாழ். போதனா மருத்துவமனையிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்ட மருத்துவ நிபுணர் மீள் அழைக்கப்பட வேண்டும். - சிறீதரன் எம்.பி!
,
சிறப்பு மருத்துவ நிபுணர் ஒருவர் மாற்றீடு ஆளணி எதுவும் இன்றி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டமையால் சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்களின் நிலை பெரும் கவலைக்குரியதாகவும் சவாலாகவும் மாறியுள்ளது.
இவர்களுக்கான சிகிச்சைகளில் ஏற்படும் காலதாமதம் அச் சிகிச்சைகளின் பலனை கேள்விக்குறியாக்கும் என யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று (31) நடைபெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
"பல் முக சீராக்கல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஒருவரே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்".
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேலும் அங்கு தெரிவிக்கையில்,
யாழ் போதனா மருத்துவமனையில் பல் முக சீராக்கல் பிரிவின் சிறப்பு மருத்துவ நிபுணர் ஒருவரே உள்ளார், அவருடை சிறந்த சேவையினூடாக இதுவரை காலமும் காணப்பட்ட நீண்ட கால காத்திருப்போர் நோயாளர் பட்டியல் அவரது சேவைக் காலத்தில் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.
நோயாளர்களின் நன்மை கருதி கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையிலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள நோயாளர்களை பார்வையிட்டு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
இதில் பெரும்பான்மையாக அவரது சேவையினை பெறுபவர்களாக பாடசாலை மாணவர்கள் கணப்படுகின்றனர்.
எந்தவொரு தனியார் மருத்துவமனைகளிலும் சேவையாற்றுவதில்லை என்பதனையும் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன்,
இவருடைய திடீர் இடமாற்றத்தினால் சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்களின் நிலை பெரும் கவலைக்குரியதாகவும் சவாலாகவும் மாறியுள்ளது.
இவர்களுக்கான சிகிச்சைகளில் ஏற்படும் காலதாமதம் அச்சிகிச்சைகளில் பலனை கேள்விக்குறியாக்கும் எனவும் எனவே உடனடியாக அவரை போதனா மருத்துவமனைக்கு விடுவித்து உதவ வேண்டும் அல்லது மாற்று ஆளணியினை நியமிக்க வேண்டு்ம் என வலியுறுத்தினார் .
அத்துடன் கடும் நெருக்கடிகளையும் சவால்களையும் சந்தித்து வரும் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் உள்ள மருத்துவ அதிகாரி ஒருவரும் மாற்றீடு ஆளணியின்றி இவ்வாறே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ் விடயம் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சாதகமான பதிலை வழங்கியுள்ளார்.