கிளிநொச்சி மாவட்டத்தின் புழுதியாறு ஏற்று நீர்பாசனத் திட்டத்தை மீண்டும் விரைந்து செயற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்!
வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட அனைத்து ஏற்று நீர்பாசனத் திட்டங்களையும் மீள ஆரம்பிக்க வேண்டும்

கிளிநொச்சி மாவட்டத்தின் புழுதியாறு ஏற்று நீர்பாசனத் திட்டத்தை மீண்டும் விரைந்து செயற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை (08) நடைபெற்றது.
கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த மாவட்டச் செயலர் சு.முரளிதரன், கிளிநொச்சி மாவட்டத்தில் திருவையாறு மற்றும் ஸ்கந்தபுரம் ஏற்று நீர்பாசனத் திட்டங்கள் வெற்றிகரமாக இயங்கும் நிலையில் புழுதியாறு ஏற்று நீர்பாசனத் திட்டத்தையும் இயக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். இந்தத் திட்டத்தை செயற்படுத்துவதன் ஊடாக ஏனைய பயிர்களையும் உற்பத்தி செய்ய முடியும் எனத் தெரிவித்ததுடன் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டு கைவிடப்பட்ட இந்தத் திட்டத்தை மீள ஆரம்பிக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தால் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட அனைத்து ஏற்று நீர்பாசனத் திட்டங்களையும் மீள ஆரம்பிக்க வேண்டும் என வலியுறுத்திய ஆளுநர், புழுதியாறு ஏற்று நீர்பாசனத் திட்டத்தையும் விரைவில் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
புழுதியாற்றுக் குளத்தை கமநல சேவைகள் திணைக்களத்திடமிருந்து நீர்பாசனத் திணைக்களத்திடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் எந்திரி த.ராஜகோபு தெரிவித்தார்.
திருவையாறு மற்றும் ஸ்கந்தபுரம் போன்று சோலர் பனல் ஊடாக மின்உற்பத்தியை இலங்கை மின்சார சபைக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலேயே விவசாயிகளுக்கான செலவு குறைவாக இருக்கும் எனக் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. இலங்கை மின்சார சபை அத்தகைய நடவடிக்கைகளை தற்போது நிறுத்தியுள்ள நிலையில் வேறு வழிகள் ஊடாக இதனைச் செயற்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டது.
இதன்போது புழுதியாறு விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், புலம்பெயர் சமூகத்தவர்கள் சோலர் பனலில் நேரடியாக ஏற்று நீர்பாசனத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டனர். அந்தத் திட்டத்தை பரிசீலனை செய்யுமாறு கூறிய ஆளுநர், 40 ஏக்கரில் முதல் கட்டமாக பரீட்சார்த்தமாக பயிர்ச்செய்கையை முன்னெடுக்குமாறும் அறிவுறுத்தினார்.
மேலும், இலங்கை மின்சார சபையின் மின் இணைப்பை பெற்று ஏற்று நீர்பாசனத் திட்டத்தை முன்னெடுத்தால் விவசாயிகளிடம் அதிகளவான பணம் அறவிடப்படவேண்டி வரும் என கிளிநொச்சி மாவட்ட நீர்பாசனத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார். கடந்த காலங்களில் அதிகளவு கட்டணம் விவசாயிகள் செலுத்தவேண்டி வந்தமையாலேயே திட்டம் தோல்வியடைந்தது என்றும் குறிப்பிட்டார். ஷ
இதன்போது விவசாயிகள் சார்பில் கலந்துகொண்டவர்கள், தாம் கட்டணங்களைச் செலுத்த தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டனர்.
முதல் கட்டமாக சோலர் பனல் ஊடாக நேரடியாக ஏற்று நீர்பாசனத் திட்டத்தை முன்னெடுக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு அறிவுறுத்திய ஆளுநர், இலங்கை மின்சார சபையுடன் சோலர் பனல் ஊடாக மின்உற்பத்தியை விற்பனை செய்யும் நடவடிக்கைக்கான சாத்தியப்பாடு தொடர்பில் ஆராய்வதாகவும் குறிப்பிட்டார்.
இந்தக் கலந்துரையாடலில் மாவட்டச் செயலர், மேலதிக மாவட்டச் செயலர், திட்டமிடல் பணிப்பாளர், கரைச்சி பிரதேச செயலர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், விவசாயத் திணைக்களப் பணிப்பாளர், வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், விவசாய பீடாதிபதி, விவசாயத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர், நீர்பாசனத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர், கமநலசேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர், இலங்கை மின்சார சபையினர், விவசாயிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.