ஆண்ட பரம்பரை என சொல்லும் காலம் எல்லாம் காணாமல் போய்விட்டது. - நெல்லை உதவி ஆணையர் வினோத் சாந்தாராம்!
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சமீபகாலமாக சாதிய மோதல்கள் அதிகரித்து வருகின்றன.

ஆண்ட பரம்பரை என சொல்லும் காலம் எல்லாம் காணாமல் போய்விட்டது. இப்போது யார் படித்து பெரிய பதவிகளில் உட்கார்கிறார்களோ, அவர்களே ஆண்ட பரம்பரை என நெல்லை உதவி ஆணையர் வினோத் சாந்தாராம் பேசினார்.
சாதிய மோதல்கள் அதிகம் நிகழும் பகுதியாக கருதப்படும் திருநெல்வேலியில், யார் ஆண்ட பரம்பரை என போலீஸ் உயரதிகாரி ஒருவர் பேசிய பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சமீபகாலமாக சாதிய மோதல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் இத்தகைய மோதல்கள் நடைபெறுவதுதான் வேதனைக்குரிய விஷயமாக உள்ளது. புத்தகம் சுமக்க வேண்டிய கைகளில் ஆயுதங்களை ஏந்துவது ஒரு தலைமுறையையே வீணடித்துவிடும் என கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, இத்தகைய சாதிய மோதல்களுக்கும், மாணவர்கள் மனதில் சாதிய வன்மம் இருப்பதற்கும் 'ஆண்ட பரம்பரை' என்கிற சொல்லே காரணம் என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். யாரோ ஒருவர் சொல்லி சென்றதை வைத்துக் கொண்டு, ஆள் ஆளுக்கு 'நாங்கள் ஆண்ட பரம்பரை' என பெருமை பேச தொடங்கி விட்டனர். பற்றாக்குறைக்கு செல்போனை திறந்தாலே, இன்ஸ்டாவிலும், ஃபேஸ்புக்கிலும் வரைந்த மீசையை முறுக்கிக் கொண்டு, 'ஆண்ட பரம்பரைடா நாங்க' எனக் கூச்சலிடுவதை பார்க்க முடிகிறது.
இந்நிலையில், திருநெல்வேலி மாநகர காவல் உதவி ஆணையர் வினோத் சாந்தாராம், பள்ளியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
ஒருசிலர் எதற்கெடுத்தாலும் நாங்கள் 'ஆண்ட பரம்பரை' என திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருங்கள். அப்படி அவர்கள் சொல்வதை போல, யாரும் இங்கு ஆண்ட பரம்பரை எல்லாம் கிடையாது. அந்தக் காலம் எல்லாம் மலையேறிப் போய்விட்டது. யார் படித்து உயர்ந்த பதவிகளில் அமர்கிறார்களோ, அவர்களின் பரம்பரைதான் உண்மையான ஆண்ட பரம்பரை.
என்னுடைய தாத்தா இந்த மாவட்டத்தின் கலெக்டர்; என்னுடைய தாத்தா இந்த மாவட்டத்தில் எஸ்.பி. என்று சொல்பவர்கள்தான் உண்மையாகவே ஆண்ட பரம்பரையாக இருக்க முடியும். வெறும் பழம்பெருமையை பேசிக்கொண்டு, யாரோ சம்பாதித்த சொத்துகளை அனுபவிப்பதும், ஆசைப்படுவதும் எல்லாம் பெருமை கிடையாது.
எனவே, யாருடைய ஆதரவும் இல்லாமல் தனித்து நிற்கும் தைரியம் நம்மிடம் இருக்க வேண்டும். படித்து பெரிய ஆளாக வர வேண்டும். பெரிய பெரிய பதவிகளில் அமர வேண்டும் என்ற எண்ணம் மாணவர்களுக்கு வர வேண்டும் என உதவி ஆணையர் வினோத் சாந்தாராம் பேசினார். அவரது இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.