Breaking News
மாமனிதர் நா.யோகேந்திரநாதன்....
.

போர் முடிந்து 15 ஆண்டுகள் கடந்தும் போருக்குள் நிகழ்ந்தவற்றை தனது வாழ்நாளின் கடைசி வரையில் வரலாறாக்கும் ஆற்றல் பெற்றவராக நா.யோகேந்திரநாதன் ஐயா விளங்கியிருக்கிறார்.
அவருடைய நீந்திக்கடந்த நெருப்பாறு நூல்கள் ஐம்பது ஆண்டுகள் கடந்த பின்னர் ஆய்வுக்கு உட்படுத்தினாலும் விடுதலைப் போராட்டத்தின் கட்டுமாணங்களை, வாழ்வியலை, வீரத்தை, போர்த் திறத்தை, பண்பாட்டை, கட்டுக்கோப்பை மிகத் தெளிவாக வெளிப்படுத்தும் வல்லமை பெற்றவையாக விளங்கியிருக்கின்றன. போருக்குள் வாழ்ந்த பெரும் எழுத்தாளர்களாக சொல்லப்பட்டவர்களில் பலர் திசைமாறிப் பயணித்தபோதும் போருக்கு பின்னரும் அதே வீரியத்துடன் பயணித்த ஒரு சிலரில் நா.யோகேந்திரநாதனும் ஒருவர். நாட்டில் இருந்துகொண்டு இவ்வாறான படைப்பு இலக்கியங்களை படைக்கும் போது, அவரை பயங்கரவாத ஆதரவாளர் என்று சிறையில் கூட அடைக்கலாம். விசாரணைகளைக் கூட அவர் எதிர்கொண்டார். ஆனால் ஓய்ந்துவிடவில்லை. சாதாரணமாக தேசியத்தை நேசிப்பவர்கள் அனைவரும் நாட்டுப்பற்றாளர்களே.. ஆனால் அவர்களிலும் நாட்டிற்காக உழைத்தவர்களில் பெரிதாய் தெரியும் சிலரே மாமனிதர் என்பதாகத்தான் போர்க்கால மதிப்பளிப்புக்கள் நிகழ்ந்தன. கவிஞர் நாவண்ணன் மாமனிதராக மதிப்பளிக்கப்பட்டார், எழுத்தாளர் பொன்.கணேசமூர்த்தி மாமனிதராக மதிப்பளிக்கப்பட்டார். நா.யோகேந்திரநாதன் போருக்குள்ளும் போருக்குப் பின்னரும் வீரியம் குறையாத ஈழத்தமிழ்களின் பெரு வரலாற்றை ஆவணமாக்கிய பெரும் பணியைச் செய்திருக்கிறார்.
அவரை வரலாறு மாமனிதராக பெருமதிப்பளிக்கப்பட வேண்டும் என்பதே அவரையும் அவரது படைப்புக்களையும் அறிந்தவர்களின் பெரு விருப்பாகும்.