கைது செய்ய சென்ற பொலிஸாரும் காயம்-சம்மாந்துறையில் சம்பவம்!

நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த பல குற்றச்சாட்டுடன் தொடர்புடைய  சந்தேக நபர் தலைமறைவாகி இருந்த நிலையில் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டதுடன் மற்றுமொருவரும் போதை  மாத்திரைகளுடன் சம்மாந்துறை பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டனர். இச்சம்பவமானது செவ்வாய்க்கிழமை(3) இரவு அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு வேறு இடங்களில் இடம்பெற்றுள்ளதுடன் போதைப் பொருளுடன் நடமாடிய  2 சந்தேக நபர்கள் இதன் போது   கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு   பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேக நபர் தலைமறைவாகி இருந்த நிலையில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த நிலையில் பொலிஸார் தமது உயிரை பணயம் வைத்து அச்சந்தேக நபரை கைது செய்திருந்தனர்.குறித்த 36 வயதுடைய  சந்தேக நபரை கைது செய்ய சென்ற நிலையில் சந்தேக நபர் பொலிஸாரை தாக்க முற்பட்டதுடன்  பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பி சென்றிருந்தார்.பின்னர்  நீண்ட தேடுதலின்  மீண்டும் அச்சந்தேக நபர்  கைதானார்.இதன்போது இச்சம்பவத்தில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் இடது  காலில் காயமடைந்ததுடன் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரும் காயமடைந்திருந்தார் என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார். 
 
மேலும் நீண்ட காலமாக பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை சூட்சுமமாக விநியோகத்து வந்த மற்றுமொரு 25 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் அன்றைய தினம் இரவு கைது செய்துள்ளனர். அத்துடன் கைதான குறித்த  2 சந்தேக நபர்களையும் சட்ட நடவடிக்கைக்காக பொலிஸார் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த கைது நடவடிக்கையானது மேலும் குறித்த சோதனை நடவடிக்கையானது  கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி  வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய   அம்பாறை மாவட்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சுஜித் வேதமுல்லவின்  உத்தரவிற்கமைய   அம்பாறை மாவட்ட  சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்திலில்   கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனைக்கமைய   மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் தலைமையிலான பொலிஸார்    சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை   மேற்கொண்டு வருகின்றனர்.