கண்டி மாவட்டத்தில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமையினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 635 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

இன்று (08) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின்படி, 192 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர். 
சீரற்ற காலநிலையினால் 512,123 குடும்பங்களைச் சேர்ந்த 1,766,103 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
கண்டி மாவட்டத்தில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், அங்கு 234 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் 89 மரணங்களும், பதுளை மாவட்டத்தில் 90 மரணங்களும், குருநாகலில் 61 மரணங்களும், கேகாலை மாவட்டத்தில் 32 மரணங்களும், புத்தளத்தில் 37 மரணங்களும் மற்றும் மாத்தளை மாவட்டத்தில் 28 மரணங்களும் பதிவாகியுள்ளன. 

அத்துடன், 22,218 குடும்பங்களைச் சேர்ந்த 69,861 நபர்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் சேதமடைந்த வீதிகளை புனரமைப்பது தொடர்பில் ஆராய்வு.

நுவரெலியா மாவட்டத்தில் வீதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை ஆராய்வது மற்றும் அதற்காக மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் இன்று (08) காலை நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. 

டித்வா சூறாவளியால் நுவரெலியா மாவட்டத்தில் சேதமடைந்த அனைத்து வீதிகள் மற்றும் அவற்றை புனரமைக்க எடுக்கும் காலம் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. 
சாதாரண பழுதுபார்ப்பு மேற்கொண்டு திறக்க முடியாத வீதிகள் குறித்து அதிகாரிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்த ஜனாதிபதி, இது தொடர்பாக அறிக்கையை வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரினார். 

நுவரெலியா மாவட்டத்தில் சில வீதிகள் மற்றும் பாலங்களை அமைக்கும் போது தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைகளை கவனத்திற் கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர். 
அதன்படி, நுவரெலியா மாவட்டத்தில் சேதமடைந்த வீதிகள், வடிகாண்கள் மற்றும் பாதுகாப்பு மதில் சுவர்களை புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து புனரமைப்பு நடவடிக்கைகளையும் நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தினார்.