திலீபனை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்!

அரசியலமைப்பில்  இருக்கும் 13 ஆவது திருத்தத்தை அமுல் செய்ய வேண்டும் என்று கேட்பதிலே சைக்கிள் கட்சியைத் தவிர நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாகத்தானே இருக்கின்றோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்று ஊடக சந்திப்பை நடத்திய போதே சி.வி.கே.சிவஞானம் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈழத் தமிழர் விடயத்தில் சர்வதேசம் அதீத அக்கறை எடுக்க வேண்டும் என்று சொன்னாலும் அதில் மிக முக்கியமான பணி இந்தியாவுக்கு உண்டு. இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஊடாக அந்தப் பொறுப்புக் கூட இந்தியாவுக்கு இருக்கின்றது.

ஆனால், பொதுவாகவே இந்தியத் தரப்பு ஒரு விடயத்தைத் திரும்பத் திரும்ப சொல்லி வருகின்றது. அது என்னவென்றால் ஒற்றுமைப்பட வேண்டும் என்பதுதான். அண்மையில் கூட இலங்கைக்கான இந்தியத் தூதுவருடனான சந்திப்பின் போது கூட நாங்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்றுதான் அவர்  சொல்லியிருக்கின்றார்.

உண்மையில் நாங்கள் ஒருமித்துதான் இருக்கின்றோம். உதாரணத்துக்கு 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாகத்தானே இருக்கின்றோம். பிறகு ஏன் ஒற்றுமையாக வாருங்கள் என்று இந்தியா சொல்கின்றது?

ஆக நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கின்றோம். அதைவிடுத்து விசுவாமித்திரருக்கு வரம் கொடுத்தது போல் கேட்கத் தேவையில்லை. நாங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்தாலும் ஆக அந்தச் சைக்கிள் கட்சியினர்தான் இதற்கு உடன்படவில்லை. அவர்கள் உடன்படாமல் இருக்கட்டும்.

உலகத்தில் எங்கும் எல்லோரும் முழு ஒற்றுமை என்று கிடையாதே. அவர்களை விட்டால் நாங்கள் தமிழரசுக் கட்சி மட்டுமல்லாமல் ஏனைய எல்லாக் கட்சிகளும் ஒருமித்துத்தான் இருக்கின்றன என்றார்.

திலீபனை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் - சி.வீ.கே.சிவஞானம்

உணவுத்தவிர்பை மேற்கொண்டு உயிர்நீத்த திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என இலங்கைத் தமிழரசுக்கட்சி வலியுறுத்தியுள்ளது. 

தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். 

இந்த நிலையில், பொருத்தமான அரசியல் கலப்பற்ற நினைவேந்தல் கட்டமைப்பை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பின்போது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார். தற்போது தீபங்களுக்கு முன்பாக தலை குனிந்து நிற்பவர்கள் தம்மை தியாகிகளாக நினைக்கின்றனர். 

இதில் யார் யார்? இராணுவப் புலனாய்வுடன் தொடர்பு கொண்டவர்கள் என்பது தனக்கு தெரியும் எனவும், சீ.வீ.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.