தியாகதீபம் திலீபனின் திருஉருவப்படத்திற்கு மலர்தூவி, சுடரேற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.

தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியாக யாழில் இன்று ஆரம்பமாகியது.

தமிழ் மக்களின் உரிமைக்காக 12 நாட்கள் உணவையும் நீரையும் ஒறுத்து உயிர்த் தியாகம் செய்த தியாகதீபம் திலீபனின் 38ஆவது  ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நல்லூரில் நடைபெற்றது.

 நல்லூர் கந்தன் ஆலயம் அருகே அவர் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் அஞ்சலி நடைபெற்று, தொடர்ந்து, நல்லூரான் பின் வீதியில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்தில் நினைவேந்தல் இடம்பெற்றது.

இதன்போது பொதுச் சுடர் ஏற்றி, மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. 

இவ் நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் போராளிகள், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளரான திலீபன் இந்திய அமைதிப் படையிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை  முன்வைத்து  1987 செப்ரெம்பர் 15ஆம் திகதி உணவையும் நீரையும் தவிர்த்து போராட்டத்தை முன்னெடுத்தார்.

12 நாட்களுக்கு உணவையும் நீரையும் மறுத்து, 1987 செப்டம்பர் 26 அன்று அவர் தனது உயிரை தியாகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதேவேளைதியாகதீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் இன்று இடம்பெற்றது. 

குறிப்பாக தியாகதீபம் திலீபனின் திருஉருவப்படத்திற்கு மலர்தூவி, சுடரேற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன. 

அந்தவகையில் மாவீரர் ஒருவரின் தாயாரான செ.தவராணி ஈகைச்சுடரினை ஏற்றி குறித்த நினைவேந்தலை ஆரம்பித்துவைத்தார். தொடர்ந்து தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலிகள் மேற்கொள்ளப்பட்டன. 

இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கலந்துகொண்டதுடன், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.