சிறுவர் உரிமைகளை பாதுகாக்கக் கோரி முல்லைத்தீவில் விழிப்புணர்வு நடைபவனி!

முல்லைத்தீவு முத்தையன்கட்டு -  ஜீவநகர் கிராமத்தில் பொது நோக்கு மண்டபத்திற்கு முன்பாக  வெள்ளிக்கிழமை (22) சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி விழிப்புணர்வு நடைபவனி நடைபெற்றது. 

சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு "நாம் சிறுவர் எம்மை காப்பீர்" எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு பேரணியினை முத்தையன்கட்டுகுளம் கிராம சேவையாளர் பவிதா ஆரம்பித்து வைத்திருந்தார்.

முத்தையன்கட்டு ஜீவநகர்  பொதுநோக்கு மண்டபத்திற்கு முன்பாக  ஆரம்பித்த குறித்த பேரணியானது நடைபவனியாக சென்று ஜீவநகர் சமாதான சுவிஷேச தேவாலயத்தில் நிறைவு பெற்றிருந்தது. 

ஜெபஆலயமிஷன் திருச்சபையின் கீழ் இயங்கும் பெத்தேல் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றிருந்தது. 

சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை கொடு, சிறுவர்களை பாதுகாப்போம் , சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு மன்னிப்பு இல்லை, குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்காக நாம் நமது நிகழ்காலத்தை தியாகம் செய்வோம், அமர்த்தாதே அமர்த்தாதே சிறுவர்களை வேலைக்கு அமர்த்தாதே, சிறுவர்களுக்கான சிறுவர் நேயமுள்ளதும் பாதுகாப்பு மிக்கதுமான சூழலொன்றை கட்டியெழுப்புவோம், வன்முறைகளில் இருந்து சிறுவர்களை நாம் பாதுகாப்போம் போன்ற பல்வேறு பதாதைகள் தாங்கிய விழிப்புணர்வு பதாதைகளுடன் நடைபவனி இடம்பெற்றிருந்தது.  

குறித்த பேரணியில் முத்தையன்கட்டுகுளம் கிராம சேவையாளர் பவிதா, வெத்தேல் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் இயக்குனர் காலேப் மற்றும் உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

 

 

1000495440.jpg

1000495456.jpg

1000495444.jpg

1000495443.jpg