பெரியவெளி பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாமில் பாதுகாப்புத்தேடி தஞ்சம் புகுந்திருந்த பொதுமக்கள் 44 பேர் ஆயுத தாரிகளினால் சுட்டும், வெட்டியும், எரித்தும் படுகொலை செய்யப்பட்டனர்.
மூதூர் பெரியவெளி பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த அகதி முகாமில் பாதுகாப்புத்தேடி தஞ்சம் புகுந்திருந்த பொதுமக்கள் 44 பேர் ஆயுத தாரிகளினால் சுட்டும், வெட்டியும், எரித்தும் படுகொலை செய்யப்பட்ட பெரியவெளி அகதி முகாம் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு புதன்கிழமை இடம்பெற்றது.
படுகொலை செய்யப்பட்ட உறவுகளினாலும், பொதுமக்களினாலும் படுகொலை செய்யப்பட்டவர்களை புதைத்த இடத்தில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு மலர்தூவி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
படுகொலைச் சம்பவம் இடம்பெற்று 39 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையிலும் தமக்கான நீதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் தற்போது இருக்கின்ற புதிய அரசின் ஆட்சியிலாவது தமக்கான நீதி கிடைக்கப்பெற வேண்டும் என பாதிக்கப்பட்ட உறவுகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
செம்மணி புதைகுழி விவகாரம் மற்றும் உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டவல தெரிவித்துள்ளார்.
குறிப்பாக செம்மணி தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அரசு அந்த நடவடிக்கைகளில் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் கூறினார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி விவகாரங்கள் தொடர்பில் எம்மிடம் உள்ள தகவல்களை நாம் வெளியிட மாட்டோம். அவற்றை வெளியிட்டால் அதைப் பெற்றுக்கொள்வோர் அதனை எவ்வாறான செயற்பாடுகளுக்குப் பயன்படுத்துவார்கள் எனத் தெரியாது. இந்த விடயங்களில் எவரது அவசரத்துக்கும் ஏற்ப எம்மால் செயற்பட முடியாது.
கடந்த அரசு அவ்வாறு செயற்பட்டாலும் எமது அரசு ஒருபோதும் அவ்வாறு செயற்படாது. அரசு என்ற வகையில் நாம் மிகவும் பொறுப்புடன் செயற்படுவோம் என்றார்.
