சில பிக்குகள் சந்தேக நபருக்கு 50,000 வரை பணத்தை வழங்கியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பெண் போன்று நடித்து 17 பிக்குகளை ஏமாற்றி நிதி மோசடி செய்த இளைஞர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்கள இணைய புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் தலாவ பகுதியைச் சேர்ந்த, மாலபே பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் உயர் கல்வி பயின்று வரும் மாணவன் ஆவார்.

17 பௌத்த பிக்குகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,

குறித்த மாணவன், பிக்குகள் அதிகமாக பயன்படுத்தும் முகநூல் ஒன்றில் அறிமுகமாகி பின், இளம் பெண்ணாக உருவாக்கப்பட்ட போலி முக நூல் ஒன்றின் ஊடாக முதலில் பிக்குகளுடன் குறுந்தகவல்களை அனுப்பியுள்ளார்.

அதன் பின்பு தனது குரலை மாற்றி பிக்குகளிடம் ஒரு பெண்ணாகப் பேசியுள்ளதுடன், வீடியோ அழைப்புகளை மேற்கொண்டு தவறான படங்களை காண்பித்து துறவிகளின் செயல்பாடுகளை காணொளியாக பிடித்துள்ளார்.

பதிவு செய்யப்பட்ட காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி அவர்களிடம் பணம் கேட்டுள்ளதாகவும், பணம் கொடுக்க மறுக்கும் பிக்குகளின் காணொளிகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

சில பிக்குகள் சந்தேக நபருக்கு 50,000 வரை பணத்தை வழங்கியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் குறிப்பிட்ட நபர் பற்றிய தகவல்களை மெட்டா நிறுவனம் மூலம் பெற்று நடாத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் துறையின் இணைய விசாரணைகள் மற்றும் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.