படுகொலை செய்யப்பட்ட தமிழ்ப்பெண்களுக்கு நீதிவழங்குவதில் அரசாங்கங்கள் கவனஞ்செலுத்துவதில்லை - சாணக்கியன் இராசமாணிக்கம்.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இசைப்பிரியா உயிருடன் இருந்தமைக்கான சாட்சியங்கள் பல வெளியாகின. கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் உயிருடன் இருந்த இசைப்பிரியாவின் புகைப்படங்கள் வெளியாகின. பின்னர் ஆடையின்றி இருக்கும் காணொளிகள் வெளியாகின.

இசைப்பிரியா ஒரு பெண் இல்லையா, 1000 இற்கும் அதிகமான தமிழ் பெண்கள் படையினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள்.  இவர்களுக்கு ஏன் நீதி வழங்க முடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்  தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற  2025 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவுத் திட்டத்தின்   வெளிவிவகாரம்,  வெளிநாட்டு வேலைவாய்ப்புகள்  மற்றும்    சுற்றுலாத்துறை அபிவிருத்தி  அமைச்சு மீதான விவாதத்தில்  உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

அநுராதபுரம் வைத்தியசாலையின் வைத்தியர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இந்த நாட்டில் இனியொருபோதும் இவ்வாறான சம்பவங்கள் தோற்றம் பெறாமல் இருக்க வேண்டும்.

இந்த நாட்டில்  1000 இற்கும் மேற்பட்ட தமிழ் பெண்கள் இராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். அநுராதபுரம் சம்பவத்துக்கு அரசாங்கமும், நாட்டு மக்களும் கொந்தளிப்பதை போன்று ஏன் தமிழ் பெண்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு  கொந்தளிக்கவில்லை.

சிறந்த உதாரணமாக எமது இசைப்பிரியாவை குறிப்பிட முடியும். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இசைப்பிரியா உயிருடன் இருந்தமைக்கான சாட்சியங்கள் பல வெளியாகின. கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் உயிருடன் இருந்த இசைப்பிரியாவின் புகைப்படங்கள் வெளியாகின. பின்னர் ஆடையின்றி இருக்கும் காணொளிகள் வெளியாகின.

இசைப்பிரியா ஒரு பெண் இல்லையா,  அவருக்கு இந்த நாட்டில் நீதி தேவையில்லையா,   படுகொலை செய்யப்பட்ட தமிழ் பெண்களுக்கு நீதியை வழங்க ஏன் இலங்கை அரசாங்கங்கள்  அவதானம் செலுத்துவதில்லை. முடிந்தால் விசாரணை செய்து  சட்டத்தை நிலைநாட்டுங்கள். இராணுவத்தினர் கூட்டு பாலியல் வன்கொடுமைகளிலும் ஈடுபட்டார்கள். இந்த அநீதிகளுக்கு எப்போது நீதி கிடைக்கும்.

பாதிக்கப்பட்ட எமது சமூகம் தொடர்ந்து  நீதியை கோருகிறார்கள். குற்றவாளிகளை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக்கொண்டு இந்த அரசாங்கமும் செயற்படுகிறது.  பொறுப்புற்கூறல் விவகாரத்தில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது என்றார்.