.

மன்னார் தீவு பகுதியில் இரு தடவைகள் கனியமண் அகழ்வு முயற்சி பணிகள் முன்னெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும், மக்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் வருகை தந்த குழுவினர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

கடந்த திங்கட்கிழமை மணல் அகழ்வுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இன்றைய தினம் (19) காலை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் சுமார் 23 திணைக்களங்கள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு கட்டம் கட்டமாக வருகை தந்தனர்.

இதன் போது மாவட்டச் செயலக பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்படலாம் என்ற நோக்கத்தில் பொலிஸார் அப்பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் சுமார் 23 திணைக்களங்கள் தோட்டவெளி கொன்னையன் குடியிருப்பு பகுதிக்குச் சென்றிருந்த வேளையில், அப்பகுதியில் நூற்றுக்கணக்கான பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதிகாரிகள் குறித்த பகுதிக்கு கணிய மணல் பரிசோதனைக்கான கள விஜயம் மேற்கொண்ட போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர்.

இந்த நிலையில் நேற்றும், இன்றும் நாடாளுமன்றத்தில் குறித்த கணிய மணல் பரிசோதனை மற்றும் அகழ்வு நடவடிக்கைக்கு எதிராக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரை நிகழ்த்திய நிலையில், குறித்த விடயம் தொடர்பாக உயர் மட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு உடனடியாக இன்றைய தினம் (19) முன்னெடுக்கப்பட இருந்த கணிய மணல் அகழ்வுக்கான பரிசோதனை கள விஜயம் நிறுத்தப்பட்டு வருகை தந்த அதிகாரிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதன்போது பொது அமைப்புகளின் தலைவர் வி.எஸ்.சிவகரன்,மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளர் உள்ளடங்களாக கிராம மக்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், மீன்பிடி அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.