.

மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள காந்திநகர் பிரதேசத்தில் கேரளா கஞ்சாவுடன் பதினேழு வயது சிறுவன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வீடு ஒன்றை முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினர் பெருமளவிலான ஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் குறித்த சிறுவனை நேற்று (06.12.2024) கைது செய்துள்ளனர்.

இதன்போது கல்லடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து வீடு ஒன்றை முற்றுகையிட்டு சோதனை மேற்கொண்டபோது, தனது உடமையில் மறைத்து வைத்திருந்த போதை பொருட்களை சிறுவன் வீசியதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதில் 10 கிராம் 950 மில்லிக்கிராம் ஹெரோயின் போதை பொருளும், பொதி செய்யப்பட்ட 650 மில்லி கிராம் கொண்ட ஐந்து பக்கற் கேரளா கஞ்சாவும், மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், சான்று பொருட்களுடன் சிறுவனை பொலிஸில் ஒப்படைத்து உள்ளதாகவும், நீதிமன்றில் முன்னிலைப்படத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.