.
கடந்த ஆண்டு ஒக்டோபர் 8ஆம் திகதி மட்டக்களப்பு – செங்கலடி பகுதிக்கு ஜனாதிபதி விஜயம் செய்தபோது, கொம்மாதுறை பகுதியில் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரை பிரச்சினைக்கு தீர்வுகோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றபோது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 30 பேருக்கு எதிரான வழக்கு நேற்று (10) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் இடம்பெற்ற வழக்கு தொடர்பான விசாரணையின்போது, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கு மீண்டும் இந்த வழக்கு ஒத்திவைக்கப்படுவதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நேற்றைய வழக்கு விசாரணையின்போது வழக்குடன் தொடர்புடைய அனைவரும் மன்றுக்கு சமுகமளிக்காமையினால் அடுத்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது செய்தி சேகரிக்கச் சென்ற இரண்டு ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.