.

 

மட்டக்களப்பை சிங்கள மயமாக்கும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக கள்ளியங்காட்டில் அமைக்கப்பட்டுள்ள சதொச விற்பனை நிலையம் செயற்பட்டு வருகின்றதா எனவும் இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடந்தையா என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புவதுடன், கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

மட்டக்களாப்பு நகருக்கான சதொச விற்பனை நிலையம், கள்ளியங்காடு பகுதியில் உள்ள அரசாங்க களஞ்சியசாலை கட்டிடத்தில் கடந்த வருடம் புதிதாக திறந்து வைக்கப்பட்டது.

இந்த சதொச விற்பனை நிலையத்திற்கு மாத்திரம் சிங்கள எழுத்துக்களால் ஆன விளம்பரப்பலகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளமைக்கு தமிழ் மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

இங்கு வாழுகின்ற மக்கள் தமிழர்களா? சிங்கள மக்களா? தமிழ் பிரதேசமா அல்லது சிங்கள பிரதேசமா அல்லது தமிழர் பிரதேசத்தை சிங்கள பிரதேசமாக மாற்றும் திட்டமா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த செயற்பாட்டிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடந்தையா? இந்த சதோச விற்பனை நிலைய செயற்பாடின் பின்னணியில் யார் உள்ளது? அரசியலா? தமிழ்மக்களை சிங்கள மயமாக்கும் செயற்பாடா? என பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளனர்.

இந்த விளம்பர பலகையை தமிழில் மாத்திரம் காட்சிப்படுத்துவதற்கு அதிகாரிகள் உடன் கவனம் செலுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.