நாடு கடத்தல் விவகாரம்: மூத்த நீதிபதியின் உத்தரவினால் பிரித்தானிய உள்துறைப் பணியகத்துக்கு நெருக்கடி

deportees-uk

சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்படுவோர் சித்திரவதை செய்யப்படக் கூடும் என்பதற்கு நம்பகமான சான்று உள்ளதாக பிரித்தானியாவின் மூத்த நீதிபதி ஏற்றுக் கொண்டுள்ளதால், பிரித்தானிய உள்துறைப் பணியகம் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக லண்டலில் இருந்து வெளியாகும் ‘தி இன்டிபென்டன்‘ நாளேடு தெரிவித்துள்ளது.

மூத்த நீதிபதியின் இந்த உத்தரவு, அடைக்கலம் கோரிய தமிழர்களை எதிர்காலத்தில் திருப்பி அனுப்புவதை நிறுத்துவதற்கு, உள்துறைப் பணியகத்துக்கு அழுத்தங்களை அதிகரிக்கச் செய்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அடைக்கலக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 80இற்கும் அதிகமானவர்களை சிறிலங்காவுக்கு நாடு கடத்துவதற்காக பிரித்தானியா நேற்று முன்தினம் வாடகை விமானம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

ஆனால் நீதிமன்றத்தில் இவர்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, சுமார் 50 வரையிலானோரை சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப மூத்த நீதிபதி தடை விதித்தார்.

இந்த உத்தரவினால், விமானத்தில் ஏற்றப்பட்டவர்களும், ஏற்றுவதற்காக கொண்டு செல்லப்படக் கொண்டிருந்தவர்களுமாக சுமார் 50 பேர் இறுதி நேரத்தில், அந்த விமானத்தில் நாடு கடத்தப்படுவோரின் பட்டியலில் இருந்து அதிகாரிகளால் நீக்கப்பட்டனர்.

இதையடுத்து 150 பேரை ஏற்றிச் செல்லக்கூடிய அந்த விமானம் வெறும் 36 பேரை மட்டுமே ஏற்றிக்கொண்டு கொழும்பு சென்றது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் மூத்த நீதிபதியின் உத்தரவையடுத்து, கட்டாயமாக தமிழர்களை சிறிலங்காவுக்கு நாடு கடத்துவதை நிறுத்துவதற்கு பிரித்தானிய உள்துறைப் பணியகத்துக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

Both comments and pings are currently closed.

Comments are closed.

Powered by WordPress