நவநீதம்பிள்ளையின் பதவியை நீடிக்க பொதுச்சபையின் அனுமதி கோரினார் பான் கீ மூன் – சிறிலங்கா ஏமாற்றம்

navi-pillai

ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு அனுமதி தருமாறு, ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் ஐ.நா பொதுச்சபையிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியுடன் முடிவடையவுள்ள நிலையில், அவர் மேலும் இரண்டு ஆண்டுகளுக்குப் பணியாற்ற இணங்கியுள்ளதாக ஐ.நா பொதுச்செயலர் பான் கி மூனின் பணியகம் நேற்று அறிவித்துள்ளது.

தென்னாபிரிக்க நீதியாளரான நவநீதம்பிள்ளை, 2008ம் ஆண்டில் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளராகப் பதவியேற்றிருந்தார்.

இவர் இந்தப் பதவியை ஏற்க முன்னர், நெதர்லாந்தில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு அமர்வின் நீதியாளராக பணியாற்றியிருந்தார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் உள்ளிட்ட மனிதஉரிமை மீறல்கள் குறித்து கடுமையான கருத்துகளை வெளியிட்டு வரும் நவநீதம்பிள்ளை, பாரபட்சமாக நடந்து கொள்வதாக சிறிலங்கா அரசினால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருபவராவார்.

நவநீதம்பிள்ளையின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைவதையிட்டு சிறிலங்கா நிம்மதியடைந்திருந்த நிலையில், அவருக்குப் பதவிநீடிப்பை வழங்க பான் கீ மூன் அனுமதி கோரியிருப்பது சிறிலங்காவை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

You can leave a response, or trackback from your own site.

Leave a Reply

Powered by WordPress