தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் கே காந்தா இன்று வெள்ளிக்கிழமை மாலை யாழ்நகரில் சந்திக்கிறார். இதற்காக இந்தியத் தூதரக அதிகாரிகள் விடுத்த அழைப்பையடுத்து கிழக்கு மாகாணத்திலும், கொழும்பிலும் தங்கியுள்ள கூட்டமைப்பின் எம்.பி.க்கள் யாழ்ப்பாணம் விரைகின்றார்கள்.
யாழ்ப்பாணம் கைதடியில் இன்று காலை பனை அபிவிருத்திச் சபையின் ஆராய்ச்சி நிலையத் திறப்பு விழாவில் இந்தியத் தூதர் கலந்து கொள்ளவுள்ளார்.
இதைத் தொடர்ந்து இவர் இன்று மாலை 5.30 மணியளவில் யாழ்நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் அனைவரையும் சந்திக்கவுள்ளார். இந்தச் சந்திப்புக்காக அனைவரையும் யாழ்ப்பாணம் வருமாறு கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் அழைத்துள்ளது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதால் பெரும்பாலான கூட்டமைப்பு எம்.பிக்கள் திருமலை, மட்டக்களப்பு, அம்பாறையில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் இந்தியத் தூதருடனான இன்றைய சந்திப்புக்காக இவர்கள் யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாண தேர்தல், அரசுடனான பேச்சுக்கள் மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்தச் சந்திப்பில் ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Posted in