யாழ். நெல்லியடி ஆர்ப்பாட்டத்தில் புலிக்கொடியுடன் இராணுவப் புலனாய்வாளர்கள்: சி. சிறீதரன்

ltte_flag_002

யாழ். நெல்லியடியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் போது இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் புலிக் கொடிகளை ஏந்திச் சென்றதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.

நிமலரூபனின் கொலையைக் கண்டித்தும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் தமிழர்களின் நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நெல்லியடியில் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இவ் ஆர்ப்பாட்டத்தின் போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பில் சிறீதரன் எம்.பி.மேலும் தெரிவிக்கையில்,

“ஜனநாயகப் போராட்டத்தைக் குழப்புவதற்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட வேலையே இது. எனினும், நாங்கள் இதற்குப் பயப்படப் போவதில்லை.

நாம் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோம். இன்றைய ஆர்ப்பாட்டத்தின்போது புலனாய்வுப் பிரிவினரே மோட்டார் சைக்கிளில் புலிக்கொடி ஏந்தி வந்தனர்.

அவர்கள் ஆர்ப்பாட்டத்தைக் குழப்ப நினைத்தார்கள். எனினும் அவர்களின் முயற்சி தோல்வியடைந்தது. மோட்டார் சைக்கிளில் வந்த அவர்கள் முதியர் ஒருவர் மீது மோதிவிட்டுச் சென்றனர் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் மேதின ஊர்வலத்தின் போது புலிக்கொடியுடனும் தமிழீழம் பெறித்த ரீசேர்டுடனும் இளைஞர்கள் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Both comments and pings are currently closed.

Comments are closed.

Powered by WordPress