கடந்த ஐ.நா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரில், சிறிலங்கா தொடர்பில் நிறைவேற்றபட்ட தீ;ர்மானத்தின் ஊடாக, சர்வதேசத்தின் தலையீட்டை சிறிலங்காவில் உள்ள மக்கள் விரும்பவில்லை என, ஐ.நா மனித உரிமைச் சபையின் சிறிலங்காப் பிரதிநிதி மனிசா குணசேகர தெரிவித்துள்ளார்.
ஜெனீவா – ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 20வது கூட்டத் தொடர், யூன் 18ம் நாள் திங்கட் கிழமை தொடங்கியுள்ளது.
இதன் தொடக்க நாள் உரையின் போதே சிறிலங்காவின் பிரதி மனிசா குணசேகர மேற்குறித்த கூற்றினைத் தெரிவித்துள்ளதாக, ஜெனீவாவில் உள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடக்கில் இருந்து இராணுவக்குறைப்பு, மக்களை மீளக்குடியேற்றம், நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தல் போன்ற வழமையான பல்லவியூடாக, மீண்டும் சர்வதேச அரங்கில் சர்வதேசத்தினை ஏமாற்றுவதாகவே சிறிங்காவின் இந்த உரை அமைந்திருந்ததாக, நா.த.அரசாங்கத்தின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் பிரதிநிதி மனிசா குணசேகர ஆற்றிய உரையில் ஐ.நா மனித உரிமைச் சபையின் 19வது கூட்டத் தொடரில், நிறைவேற்றபட்ட சிறிலங்கா தொடர்பிலான தீ;ர்மானம், அவசியமற்றதும் – தேவையற்றதொன்றென தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்மானம் உள்ளாட்டில் அர்த்தமற்றதாக உள்ளதென தெரிவித்தார்.
மேலும், சிறிலங்காவின் உள்ளக விவகாரங்களில் , சர்வதேசத்தின் தேவையற்ற தலையீடாக இதனைக் மக்கள் கருதுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் உரையில் , 2009ம் மே மாத்தில் இடம்பெயர்ந்த 290,000 மக்களில், 6022 பேர் மட்டுமே முகாம்களில் இருக்கின்றனர் என தெரிவித்த மனிசா குணசேகர, ஏனையோர் மீளக்குடியமர்த்தப்பட்டு விட்டனர் . 124 சதுர ஏக்கர் நிலப்பரப்பில், இன்னும் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் தொடர்ந்து இடம்பெறுகின்றதென தெரிவித்தார்.
12 ஆயிரம் முன்னாள் போராளிகளில், 10 949 விடுதலை செய்யப்பட்டு விட்டனர் எனத் தெரிவித்த அவர், அதில் 594 சிறார் போராளிகள், சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.
இதேவேளை வடக்கில் இருந்து இராணுவத்தினர் படிப்படியாக குறைக்கப்பட்டு வருவதாக தெரிவித்த மனிசா குணசேகர , சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
சிறிலங்கா அரசுத் தலைவரின் செயலகத்தின் நேரடிக்கண்காணிப்பில் , இவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவாகத் தெரிவித்தார்.
சிறிலங்கா ஆர்வத்தோடும், அக்கறையோடும் ஐ.நாவின் பொறிமுறையினை ஏற்று நடந்து வருவதாகவும், சிறிலங்கா முன்னேற்றகரமான பாதையில் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்


Posted in