தமிழர்களின் தொடரும் துயரமும் சுதந்திரமா​ன போர்க்குற்​ற விசாரணைக்கா​ன கோரிக்கையு​ம்

steepan_wood_001

கனடாவின் ஆளுங்கட்சியான கன்சவேட்டிவ் கட்சியின் கிச்சினர் மத்திய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்களின் நீண்ட கால நண்பருமான ஸ்ரீபன் வூட்வோத், தமிழர்களின் தொடரும் துயரம் பற்றி தனது ஆழ்ந்த கவலையையும் சுதந்திரமான போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தியும் அறிக்யையொன்றினை வெளியிட்டுள்ளார்.

மேலும் இலங்கையில் போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற ஆயிரக்கணக்காக அநியாய கொலைகள் தொடர்பாக சுதந்திரமான போர்க்குற்ற விசாரணை அனைத்துலக ரீதியில் இடம்பெற வேண்டுமென்றும் கோரிக்கையும் விடுத்துள்ளார்.

தமிழர் தாயகத்தில் இருக்கின்ற தங்களின் உற்றார், உறவினர், நண்பர்கள் படும் கொடுமைகளையும் அவர்கள் சந்திக்கும் மரணங்களையும் எண்ணி மிகவும் ஆழமான கவலையில் இருக்கும் கனடியத் தமிழரைச் சந்திக்கும்போது, ஒரு பாராளுமன்ற உறுப்பினரான எனக்கு ஏற்படும் கவலையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

இலங்கையில் 2009ம் ஆண்டு தமிழர்களுக்கெதிராக நடந்த கொடுமைகளைப்பற்றி என்னுடைய தொகுதி தமிழ்மக்களின் மூலம் அறிந்தபோது நான் மிகவும் வருத்தமுற்றேன். என்னுடைய உணர்ச்சி இப்படித்தான் இருந்தது.

1970களில் இருந்து சாதாரணமாக கனடியமக்கள் அனுபவிக்கும் அடிப்படை உரிமைகளையும் சுதந்திரத்தையும் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் அனுபவிக்கவில்லை என்பதை இவர்களைச் சந்தித்தபோது அறிந்துகொண்டேன்.

தமிழர்களுக்கெதிராகவும் அவர்களின் மொழி கலாச்சாரம் என்பவற்றிற் கெதிராக பெரும்பான்மை சிங்களவர்கள் காட்டும் இனவாதப் போக்கு தெளிவாக தெரிகின்றது. தமிழர்கள் சமத்துவத்துடன் வாழ்வதற்கான ஒரு சிறிய உத்தரவாதத்தை பல முறை முயன்றும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. தவிர்க்கமுடியாத சூழ்சிலையில் ஒருசிலர் வன்முறையைக் கையில் எடுத்தார்கள்.

கனடிய மக்கள் தங்கள் தாயகமக்களின் கோரிக்கைகளுக்காகன போராட்டத்தை அமைதியான வழியில் தொடர வற்புறுத்தியபோதும்,  இலங்கை அரசானது மிகவும் கொடுமையான முறையில் போரை முடிவுக்குக் கொண்டுவந்த முறையைப்பார்த்துக் கொண்டு கனடியர்களினால் பார்வையாளர்களாக இருக்க முடியவில்லை.

இலங்கை ஆட்சியாளர்கள் மேற்கொண்ட கொடுமையான போக்கை நிறுத்த வேண்டுமென்ற செய்தியை கொடுப்பதற்காக கனடிய அரசுசார்பில் ஒரு அமைச்சர் அனுப்பப்பட்டார். நாமும் பல நாடுகளுடன் சேர்ந்து இலங்கை அரசிடம் மனிதாபமான முறையில் நடக்க வேண்டுமென்று பல அழுத்தங்களை கொடுத்தோம்.

அத்துடன் 2009ம் ஆண்டு மனிதாபிமான உதவியாக 22.5 மில்லியன் டொலர்களையும் வழங்கினோம்.  கனடியத் தமிழர்கள் சார்பில், இலங்கை அரசிற்கெதிராக கனடிய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமெனவும் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அவலமான நிலையையும் பற்றி கனடியப் பாராளுமன்ற அமர்வுகளின்போ, நான் தொடர்ந்து குரல்கொடுத்து வந்துள்ளேன்.

இலங்கை அரசும் படைகளும் இழைத்த போர்க்குற்றம் பற்றி வெளிப்படையானதும் சுதந்திரமானதுமான ஒரு விசாரணை நடாத்தப்படவேண்டுமென போர்முடிவுற்றதில் இருந்து கனடா அழைப்பு விடுத்து வருகின்றது. பொதுநலவாய அமைப்பு மூலமும் வேறு வழிகளிலும் இராசதந்திர அழுத்தங்களைக் கொடுத்துவருகின்றோம்.

போரின் இறுதி வாரங்களில் போராளிகளின்மேலும் பொதுமக்களின்மேலும் புரியப்பட்ட காட்டுமிராண்டித்தனமான கொடுமைகளை பிபிசியின் அறிக்கைமூலம் தெரிந்து கொண்டேன். இவற்றின் நம்பகத் தன்மையை நான் உறுதியாக ஏற்றுக் கொள்கின்றேன்.

எனது கருத்துப்படி சர்வதேசப் பார்வையாளர்களினால் ஒரு வெளிப்படையான முழுமையான விசாரணை நடத்தப்பட்டு ஒரு நீதியான சமரசம் ஏற்படும்வரை இலங்கை அரசாங்கத்திற்கெதிராக முழுஅளவிலான பொருளாரத்தடையை அமுல்படுத்த வேண்டும்.

மகாத்மா காந்தி கூறியதுபோல் சோகத்தின் மத்தியிலும் நம்பிக்கையைக் கைவிடவேண்டாமென்று கனடியத் தமிழ்மக்களுக்கு வலியுறுத்திக்கூற விரும்புகின்றேன்.

காலத்திற்குக் காலம் அடக்குமுறையாளர்களும், கொலைகாரர்களும் தங்களையாரும் வெல்லமுடியாது என்று இறுமாப்போடு இருந்தாலும் இறுதியில் அவர்கள் வீழ்த்தப்படுவார்கள் என்பது வரலாறுகள் மூலம் உண்மையென்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதை எண்ணிப்பாருங்கள. உண்மையும் அன்பும் எப்போதும் வெல்லும் என்பது வரலாற்றின் நியதி.

நான் தொடர்ந்தும் கனடியத் தமிழ் சமூகத்திற்கு நட்புக்கரம் நீட்டுவதோடு, உங்களுக்காக கனடியப் பாராளுமன்றத்திலும், இலங்கையிலும் உலகெங்கும் அமைதியான வழிகளில் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருவேன் என ஸ்ரீபன் வூட்வோத் தெரிவித்துள்ளார்.

Both comments and pings are currently closed.

Comments are closed.

Powered by WordPress