இலங்கை இராணுவத்தினரின் பிரசன்னம் தொடர்ந்து காணப்படுவது சிறார்களின் மனங்களில் போரின் வடுக்கள் ஆறுவதனைத் தடுக்கின்றதென சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி மேனகா கல்யாணரத்தின தெரிவித்துள்ளார்
ஆஸ்திரேலிய ஊடக மொன்றில் இடம்பெற்ற இலங்கைத்தீவில் போர் இடம் பெற்ற பகுதிகளில் சிறார்களின் நில்வரம் குறித்த நிகழ்ச்சியொன்றில் பங்கெடுத்துக் கருத்துரைத்த போதே மேற்குறித்த விடயத்தை அவர் தெரிவித்தார்.
இலங்கைச் சிறார்களின் நில்வரம் குறித்து அவர் விபரிக்கையில்:
இலங்கைத்தீவின் யுத்த பிரதேசங்களில் தொடர்ந்தும் இராணுவத்தினரின் பிரசன்னமானது சிறார்களின், மனங்களிலிருந்த போரின் வடுக்கள் ஆறுவதை தடுக்கிறது.
நிலக் கண்ணிவெடிகள் அகற்றப்படுவதனை முன்னிறுத்திச் சில பகுதிகளில் இராணுவ பிரசன்னத்தை நியாயப்படுத்தினாலும், இராணுவத்தின் நடமாட்டம் என்பது போரினால் பயந்து போயிருக்கும் சிறார்களுக்கு, கடந்த போரை நினைவூட்டுகின்றது.
அத்தோடு அந்த நினைவூட்டல் போர் இன்னமும் முடியவில்லை என்ற ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்துகின்றது. இலங்கையின் வடக்கிலிருக்கும் சிறார்களை அவர்களின் சொந்த ஊர்களில் திரும்பவும் குடியமர்த்தி, கல்வி, மற்றைய தேவைகளை வழங்கி மற்றவர்களுடன் சம சந்தர்ப்பம் கிடைக்கச் செய்வதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்என்று கூறியுள்ளார்.


Posted in