வடக்கு கிழக்கில் சிறிலங்காப் படையினர் அந்நிய நாட்டுப் படையினர் போன்று செயற்படுவதாக நவசமசமாஜக் கட்சி பொதுச் செயலாளர் விக்கிரமபாகு கருணாரட்ன குற்றம் சாட்டியுள்ளார்.
அவ்வாறு அவர்கள் நினைப்பதனாலேயே வடக்கு கிழக்கில் நில அபகரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் நில உரிமையையும் பாதுகாப்பு உரிமையையும் கோருவதற்கு அங்கு நடைபெறும் அத்து மீறல்களே காரணம். தமிழ் மக்களின் நிலங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிப்பர். அதை இராணுவ நிர்வாகம் தீர்மானிக்க முடியாது.
கடந்த ஒரு மாத காலத்துக்குள் மாத்திரம் 10 நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் வடக்கு கிழக்கில் இடம் பெற்றுள்ளன. சகல முனைகளிலும் தோல்வியைக் கண்டு வரும் ஆட்சியாளர்கள் தமிழ் மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதுடன் இஸ்லாமிய மக்களின் மத நடவடிக்கைக்கு எதிராகவும் செயற்பட்டு வருகின்றனர் .
வாழ்கைச் செலவு அதிகரிப்பால் மக்கள் ஆட்சியாளருக்கு எதிராக அணி திரள்வதை திசை திருப்பவே பேரினவாத செயற்பாடுகளை இந்த அரசாங்கம் ஊக்குவித்து வருகின்றது. என்றார்.


Posted in